5-வது நாளாக தொடரும் ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம்- பிரதமர் தலையிட வலியுறுத்தல்
ட்ரீம்லைனர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி தொடர்பான ஏர் இந்தியா நிர்வாகத்தின் நிலைப்பாட்டில் அதிருப்தி அடைந்த விமானிகள் உடல் நலக்குறைவு என்று காரணம்காட்டி ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று சனிக்கிழமையன்று 5-வது நாளை எட்டியுள்ளது.
இதனால் மும்பை மற்றும் டெல்லியிலிருந்து இயக்கப்பட வேண்டிய 16 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள மூத்த விமானிகள் பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மேலும் 25 விமானிகளை வெள்ளிக்கிழமையன்று பணிநீக்கம் செய்தது ஏர் இந்தியா. இதனால் பணி நீக்கம் செய்யப்பட்ட விமானிகளின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. மேலும் விமானிகள் சங்க அதிகாரிகள் 11 பேரின் உரிமத்தை ரத்து செய்யுமாறு ஏர் இந்தியா நிர்வாகமானது விமானப் போக்குவரத்து சேவைகள் முகாமைக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.