ரூபாயின் மதிப்பு சர்ர்ர்ர்.. விலைவாசி விர்ர்ர்ர்!
டெல்லி: ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து வருவதையடுத்து விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக காய்கறிகளின் விலை கண்களில் நீரை வரவழைக்கும் அளவுக்கு மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
வீட்டு மளிகை சாமான்கள், காய்கறிகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் உணவுப் பணவீக்க விகிதம் 10.49 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த மாதம் 9.94 ஆக இருந்தது. கடந்த 6 மாதங்களில் உணவுப் பணவீக்க விகிதம் 'டபுள் டிஜிட்டை' தொட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
குறிப்பாக காய்கறின் விலை ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 61 சதவீதம் அதிகரித்துள்ளது. அதில் உருளைக்கிழங்கின் விலை 53.44 சதவீதமும், பருப்பு வகைகளின் விலை 11.29 சதவீதமும், பழங்கள், கோதுமை, முட்டை, பால், மீன், இறைச்சியின் விலையும் அதிகரித்துள்ளது.
காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளதாலும், அந்த அளவுக்கு சப்ளை இல்லாதாதலும் தான் விலை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் உணவுப் பணவீக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்றும் மிரட்டுகின்றனர்.