மரபணு சோதனைக்கு திவாரி ஒத்துழைக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி. திவாரியை தந்தை என உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கில் மரபணு சோதனை நடத்த எதிர்ப்புத் தெரிவித்து திவாரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் 2 நாட்களில் மரபணு சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
86 வயதான என்.டி.திவாரி உத்தரபிரதேச முதலமைச்சராக, மத்திய அமைச்சராக இருந்தவர். ஆந்திர மாநில ஆளுநராக இருந்த ஆளுநர் மாளிகைக்கே பெண்களை வரவழைத்து மசாஜ் செய்த புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இவர் மீது டெல்லியைச் சேர்ந்த 32 வயதான ரோகித் சேகர் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் என்.டி.திவாரியை தனது தந்தை என்று உரிமை கோரி இருந்தார். அவரை தனது தந்தை என்று அறிவிக்க கோரி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் என்.டி.திவாரிக்கு டி.என்.ஏ. மரபணு சோதனை நடத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து
என்.டி.திவாரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கு என்.டி.திவாரியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
மேலும் மரபணு சோதனை நடத்த திவாரி தாமாகவே 2 நாட்களில் ஒத்துழைப்பு கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.