ரூ.8 லட்சம் கேட்டு சென்னை சிறுவன் கடத்தல்: வேலூரில் 2 பேர் கைது-சிறுவன் எங்கே?
சென்னை: சென்னையைச் சேர்ந்த சிறுவனைக் கடத்திச் சென்றுள்ள கும்பல் பணம் கேட்டு மிரட்டி வருகிறது. இந்தக் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் வேலூரில் வைத்து பிடித்துள்ளனர். ஆனால், சிறுவன் இருக்குமிடம் தெரியாததால் வேலூரில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
சென்னை அரியபுரத்தை சேர்ந்த ஏழுமலையின் மகன் தினேஷ் (11) நான்காம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2ம் தேதி விளையாடச் சென்ற இந்த சிறுவன் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அபிராமிபுரம் போலீசில் புகார் செய்யப்படு, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இரண்டு நாட்கள் கழித்து ஏழுமலையை செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு நபர், உங்கள் மகன் எங்களிடம்தான் உள்ளான். ரூ. 8 லட்சம் கொடுத்துவிட்டு மகனை அழைத்துச் செல்லலாம் என்றார்.
ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று ஏழுமலை கூறவே, எப்படியாவது பணத்தை திரட்டித் தந்தாக வேண்டும் என மிரட்டிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டான்.
மீண்டும் மீண்டும் ஏழுமலையை தொடர்பு கொண்ட அந்த நபர் ரூ.8 லட்சத்தில் இருந்து படிப்படியாக குறைத்து கடைசியாக ரூ.1 லட்சம் கேட்டான். அதற்கு ஏழுமலை சம்மதிக்கவே வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து பணத்தை கொடுத்து விட்டு தினேஷை மீட்டுச் செல்லுமாறு கூறினான்.
இந்த விவரங்களை அபிராமபுரம் போலீசாருக்கு ஏழுமலை தெரிவிக்கவே, கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.
நேற்று மாலை ஏழுமலை மற்றும் உறவினர்கள் ஒரு காரிலும், சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் இன்னொரு காரிலும் வேலூர் புதிய பஸ் நிலையம் சென்றனர். மேலும் வேலூர் போலீசாரும் அங்கு சாதாரண உடையில் வரவழைக்கப்பட்டனர்,
அங்கு ஏழுமலை தனியாகவும், போலீசார் பல பிரிவாக பிரிந்து பஸ் நிலையம் முழுவதும் மறைந்து நின்றனர்.
அப்போது ஏழுமலையை மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்ட நபர், பணம் தயாராக இருக்கிறதா என்று கேட்டான். ஏழுமலைக்கு போன் வந்ததுமே பஸ் நிலையத்தில்
மறைவான இடத்தில் நின்று சந்தேகத்துக்கிடமான வகையில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த 4 பேரை பிடிக்க போலீசார் ஓடினர்.
அவர்களைப் பார்த்தும் அந்தக் கும்பல் தப்பி ஓடியது. போலீசார் விரட்டிச் சென்று 2 பேரை மடக்கிப் பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்டவர்களிடம் சிறுவன் தினேஷ் இல்லை.
பிடிபட்ட இருவரும் வேலூரை அடுத்த கருகம்புத்தூரை சேர்ந்த சிவா, ராஜேஷ் என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, சிறுவன் எங்கே இருக்கிறான் என்று தங்களுக்கு தெரியாது என்றும் பணம் வாங்கிக் வருமாறு அனுப்பினார்கள் என்றும் கூறினர்.
இதையடுத்து இவர்களை அனுப்பிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிறுவன் வேலூரில் தான் எங்காவது சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
வேலூரில் பல தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சிறுவனை வேறு ஊருக்கு கொண்டு செல்ல கடத்தல் கும்பல் முயற்சிக்கும் என்பதால் வேலூர் மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. தீவிர வாகன சோதனையும் நடந்து வருகிறது.