நித்யானந்தவுடனான உறவை ஜெயேந்திரர் கொச்சைப்படுத்திவிட்டார்: ரஞ்சிதா வாக்குமூலம்
நித்யானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமிக்க ஜெயேந்திரரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். ரஞ்சிதா என்ற பெண் நித்தியானந்தாவுடனேயே இருக்கிறார் என்றும் கூறியிருந்தார். இதற்கு நடிகை ரஞ்சிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
சங்கராச்சாரியாருக்கு எதிராக சென்னை எழும்பூர் பெருநகரக் குற்றவியல் நீதிமன்றத்திலும் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக இருமுறை நீதிமன்றத்திலும் ரஞ்சிதா ஆஜரானார்.
இன்று நீதிமன்றத்துக்கு வந்த ரஞ்சிதா அளித்த வாக்குமூலத்தில், நித்யானந்தா ஆசிரமம் மீது ஏற்பட்ட பற்றின் காரணமாக நித்யானந்தாவின் சீடராக இருக்கிறேன். மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த ஜெயேந்திரர், ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்யானந்தாவுடனேயே இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.
இது அவதூறான பேச்சாகும். நித்யானந்தாவுடனான உறவை அவர் கொச்சைப்படுத்தி உள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே ஜெயேந்திரர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
இதையடுத்து வழக்கு விசாரணை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.