கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர விசாரணை
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலையில் விரைவில் மின் உற்பத்தி துவங்கவிருக்கிறது. இதையடுத்து அணு மின் நிலையத்தில் இரவு, பகலாக பணிகள் நடந்து வருகிறது. அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அணு உலை எதிர்ப்பாளர்கள் ஒரு பக்கம் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலைத்திற்கு நேற்று 3 கடிதங்கள் வந்தன. அதில் ஒரு கடித்ததில் கான்டிராக்டர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு இந்த இடத்தில் குண்டு வைக்க வேண்டும், அந்த குண்டு வரும் 21ம் தேதி வெடிக்குமாறு செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.
மீதமுள்ள 2 கடிதங்களில் அந்த கான்டிராக்டரிடம் பணிபுரிபவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு குறிப்பிட்ட இடத்தில் குண்டு வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதங்களைப் படித்துப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து வந்து அந்த 3 கடிதங்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் உண்ணாவிரதம் இருந்து வரும் இடிந்தகரையைச் சேர்ந்த கான்டிராக்டர் ஒருவர் அணு மின் நிலையப் பணிகளை செய்து வருகிறார். போராட்டக்காரர்களை எதிர்த்து செயல்படுவதால் அவரை அணு மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றும் நோக்கில் யாரோ இந்த கடிதங்களை அனுப்பியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கடிதங்களை அனுப்பியது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நெல்லை எஸ்.பி. விஜயேந்திர பிதாரி, டி.எஸ்.பி. ஸ்டான்லி ஜோன்ஸ் தலைமையிலான தனிப்படையினரும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதங்களால் கூடங்குளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.