போலி.. போலி.. தமிழகத்தில் மக்கள் தொகையைவிட அதிகமான ரேசன் கார்டுகள்!
சென்னை: தமிழகத்தில் ரேசன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள் தொகையைவிட அதிகமாக இருப்பதாக மத்திய கணக்குக் தணிக்கை அலுவலமான சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடி. ஆனால் 2011ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி ரேசன் கார்டுகளில் சேர்க்கப்பட்டிருந்த நபர்களின் எண்ணிக்கை 8.37 கோடி ஆகும்.
மாநில மக்கள் தொகையைவிட ரேசன் கார்டுகளில் 1.16 கோடி பேர் அதிகமாக உள்ளனர்.
2010ம் ஆண்டு மக்கள் தொலை 6.7 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 1.96 கோடி ரேசன் கார்டுகள் புழக்கத்தில் இருந்தன. அதாவது தமிழகத்தில் இருந்த குடும்பங்களின் எண்ணிக்கையை விட 39.25 லட்சம் ரேசன் கார்டுகள் அதிகமாக புழக்கத்தில் இருந்தன.
எனவே லட்சக்கணக்கான போலி ரேசன் கார்டுகளும் புழக்கத்தில் இருப்பதும் தெளிவாகிறது.
கூட்டுறவுச் சங்கங்களின் மண்ணெண்ணெய் வினியோகம் செய்து வரும் எந்தவொரு ரேசன் கடையும் மார்ச் 2011 நிலவரப்படி பதிவு செய்யாமலே வினியோகம் செய்து வந்தன. ரேசன் கடை ஒன்றுக்கு பதிவுக் கட்டணம் ரூ.300 மற்றும் புதுப்பித்தல் கட்டணம் ரூ.150 என வசூலிக்கத் தவறியதால் 24,695 கடைகளின் வாயிலாக அரசுக்கு ஏறத்தாழ ரூ.1.11 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டது.
மத்திய அரசின் வழிகாட்டுக் குறிப்புகளின்படி வறுமைக் கோட்டுக்குக் கீழ், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்கள் மற்றும் 'அந்தியோதாயா அன்னயோஜனா' திட்ட பயனாளிகளுக்கு மாதத்துக்கு 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், கடந்த திமுக ஆட்சியில் 35 கிலோ உணவு தானியத்தை அந்தியோதாயா அன்னயோஜனா பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. மற்றப் பிரிவினருக்கு குடும்ப அட்டையில் சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பொருத்தே 12 முதல் 20 கிலோ வரை அரிசியை வழங்கப்பட்டது.
மத்திய அரசு அறிவுறுத்திய நிர்ணயிக்கப்பட்ட பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைக் கண்டெடுப்பதற்கு பயன்படுத்தப்படும் எந்தவொரு முயற்சியையும் மாநில அரசு எடுக்கவில்லை என்று சிஏஜி தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.
புதிய கணக்கு தணிக்கை அதிகாரி பொறுப்பேற்பு:
இதற்கிடையே சென்னை மத்திய கணக்கு தணிக்கை டைரக்டர் ஜெனரலாக எஸ்.சினேகலதா பொறுப்பேற்றுள்ளார். ஐ.ஏ.ஏ.எஸ். (இந்திய கணக்கு தணிக்கை பணி) அதிகாரியான இவர், மகாராஷ்டிர மாநில அக்கவுண்டன்ட் ஜெனரல், கணக்கு தணிக்கை சென்னை மண்டல பயிற்சி நிறுவன முதன்மை இயக்குனர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.