இந்திய துணைப் படையினருக்காக 30,000 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் கொள்முதல்
டெல்லி: ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் தான் இந்திய துணை ராணுவப் படையினருக்கு உகந்த ஆயுதமாக இருந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 30 ஆயிரம் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் இறக்குமதி செய்யப்பட்டு சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப். மற்றும் தேசிய கமாண்டோ படையினருக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிடமிருந்து மிக அதிநவீன ஆயுதங்களை ராணுவத்துக்காக இறக்குமதி செய்தாலும் ரசிய தயாரிப்பான ஏ.கே.47 ரக துப்பாக்கிகள்தான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
நடப்பு ஆண்டில் சி.ஐ.எஸ்.எப்., ஐ.டி.பி.எப் மற்றும் அசாம் ரைபில்ஸ் போன்ற துணை ராணுவப் படையினருக்கு 29,260 ஏகே ரக துப்பாக்கிகள் வாங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் எக்ஸ் 95, எஸ்.ஐ.சி ரக ஆயுதங்கள் 17,609 தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன,
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு 18 ஆயிரம் ஏகே 47 ரக துப்பாக்கிகள் வாங்கப்பட்டுள்ளன. மத்திய தொழில்பாதுகாப்புப் படையினராகிய சி.ஐ.எஸ்.எப்.க்கு 7921 ஏகே ரக துப்பாக்கிகளும் நேபாளம், மற்றும் பூட்டான் எல்லைப் படையினருக்கு 2719-ம் சீனா எல்லையில் இந்தோ- திபெத் எல்லைப் படையினருக்கு 620 ம் வாங்கப்பட்டுள்ளன.