குடியரசுத் தலைவர் தேர்தலில் மமதா ஏன் போட்டியிடக் கூடாது? லாலு கேள்வி
டெல்லி: குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளர்களை பரிந்துரை செய்வதற்கு பதிலாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியே குடியரசுத் தலைவர் வேட்பாளராகிவிடலாமே என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அல்லது துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியை வேட்பாளராக்க காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி அந்த இருவரையும் ஆதரிக்க மறுத்துள்ளார்.
மாறாக குடியரசுத் தலைவர் தேர்தலில் லோக்சபா சபாநாயகர் மீரா குமார், மகாத்மா காந்தியின் பேரன் கோபால் காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோரில் யாரையாவது நிறுத்தினால் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு பதில் மமதாவே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டால் என்ன என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், மமதா ஏன் குடியரசுத் தலைவராகக் கூடாது. அவர் என்ன அவ்வளவு மோசமான வேட்பாளரா? என்று கேட்டுள்ளார்.