விட்டுட்டு போனா கொன்னுடுவேன்: கிங்ஃபிஷர் நிறுவனத்தாரை மிரட்டிய திமுக எம்.பி.
திமுக எம்.பி. ஜெயதுரை தனது மகளுடன் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்ல கிங்ஃபிஷர் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தார். விமானம் பிற்பகல் 3.20 மணிக்கு தூத்துக்குடியில் இருந்தும் கிளம்பும் என்பதால் மதியம் 2.45 மணிக்குள் வருமாறு விமான ஊழியர்கள் அவரைக் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் தான் வரும்வரை விமானத்தை எடுக்கக்கூடாது என்று அவர் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.
பிற்பகல் 3 மணியாகியும் அவரைக் காணவில்லை. இதையடுத்து விமானம் 10 நிமிடத்தில் கிளம்பவிருப்பதாக ஜெயதுரைக்கு விமான நிறுவனத்தினர் தகவல் கொடுத்தனர். அதற்கு அவர் என்னை விட்டுவிட்டு விமானத்தை எடுத்தால் கொன்றுவிடுவேன் என்று தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. பிற்பகல் 3.19 மணி வரை விமானத்தின் கதவுகள் அவருக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தது. அவர் வராததையடுதக்து விமானம் குறித்த நேரத்தில் கிளம்பியது.
அதன் பிறகு வந்த ஜெயதுரை விமான நிலைய ஊழியர்களிடம் தகராறு செய்ததுடன் கிங்ஃபிஷர் நிறுவன மேலாளரை தாக்கும் அளவுக்கு சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் தான் அவ்வாறு நடந்துகொள்ளவேயில்லை என்று ஜெயதுரை தெரிவித்தார். மேலும் விமானம் சென்றதால் தன்னுடன் வந்தவர்களில் சிலர் தான் கோபப்பட்டதாகவும், அவர்களை தான் சமாதானப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.