கெளரவத்திற்காக மகள் ஆருஷியை பெற்றோரே கொலை செய்தனரா?
டெல்லியைச் சேர்ந்த ஆருஷி அவரது வீட்டில் பணிபுரிந்த ஹேமராஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆருஷியின் பெற்றோர்தான் குற்றவாளிகள் என தெரியவந்தது. இதையடுத்து ஆருஷியின் பெற்றோர் நுபுர் மற்றும் டாக்டர் ராஜேஸ் தல்வார் ஆகியோர் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
காசியாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில் ஆருஷியின் பெற்றோர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வலியுறுத்தி சி.பி.ஐ தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் ஆருஷி கொலை செய்யப்பட்ட நாளன்று இரவு என்ன நடந்தது என்பதையும் சி.பி.ஐ.விவரித்தது.
ஆருஷி- ஹேம்ராஜை கொலை செய்தது மட்டுமின்றி விசாரணையை திசை திருப்பும் வகையில் செயற்பட்டதற்கும் தண்டனை அளிக்க வலியுறுத்தப்பட்டது.
ஆனால் தல்வார் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், சூழல்களைக் கருத்தில் கொண்டே சி.பி.ஐ.வாதிடுவதாகவும் போதுமான வலுவான சான்றுகள் ஏதும் இல்லை என்றும் கூறினர்.
இதனை நிராகரித்த சி.பி.ஐ. தரப்பு, ஆருஷி மற்றும் ஹேம்ராஜின் தொண்டைப் பகுதி அறுக்கப்பட்ட விதமானது நன்கு பயிற்சி பெற்ற மருத்துவரால் மட்டுமே செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது என்றும் ரத்தம் தெறித்த ஆருஷி அறையை அவரது பெற்றோர் சுத்தம் செய்து கழுவியதுடன் பெட்ஷீட்டையும் மாற்றியிருக்கின்றனர். அத்துடன் ஆருஷியின் பிரேத பரிசோதனை அறிக்கையையும் மாற்ற முயற்சித்தனர் என்றும் வாதிட்டது.
இதன் மூலம் ஆருஷி கொலையானது கௌரவக் கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.