ஆப்கானிஸ்தானிலிருந்து படைகள் வெளியேற வேண்டிய தருணம் இது...: புதிய அதிபர் ஹோலண்ட் அறிவிப்பு
காபூல்: ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள பிரான்ஸ் நாட்டு படைகள் அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று புதிய அதிபர் ஹோலண்ட் தெரிவித்துள்ளார்.
ஆப்கானுக்கு அறிவிக்கப்படாத திடீர் பயணம் ஒன்றை ஹோலண்ட் மேற்கொண்டார். அங்கு பிரான்ஸ் நாட்டுப் படையினரை சந்தித்துப் பேசினார். ஆப்கானின் கிழக்கு மாகாணமாக கபிசாவில் நிஜ்ராப் மாவட்டத்தில் பிரான்ஸ் நாட்டு படையினர் மத்தியில் பேசிய ஹோலண்ட், ஆப்கானிஸ்தானிலிருந்து நமது படைகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மதித்து இங்கிருந்து வெளியேற வேண்டும் என்றார் அவர். மேலும், பிரான்ஸ் நாட்டை தீவிரவாதிகள் இலக்கு வைத்திருப்பதாகவும் ஹோலண்ட் குறிப்பிட்டார்.
பின்னர் காபூல் சென்று அதிபர் ஹமீத் ஹர்சாயையும் ஹோலண்ட் சந்தித்துப் பேசினார். ஆப்கானிஸாதானில் தற்போது 3,300 பிரான்ஸ் நாட்டுப் படையினர் முகாமிட்டுள்ளனர்.