நுழைவுத் தேர்வு முறையை எதிர்த்து வரும் 12ம் தேதி போராட்டம்- கி.வீரமணி
சென்னை: அடுத்த கல்வி ஆண்டு முதல் தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதனை எதிர்த்து வரும் 12ம் தேதி தமிழகம் முழுவதும் திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
இந்தியா முழுவதும் ஒரே கல்விக் கொள்கை, ஒரே நுழைவுத் தேர்வு என்பது போன்ற கூட்டாட்சித் தத்துவத்திற்கே உலை வைக்கும் திட்டத்தை, மத்திய மனித வள அமைச்சகம் செய்வது தவறான நிலைப்பாடு ஆகும். மறைமுகமாக மாநிலப் பட்டியலை மத்தியப் பட்டியலுக்கு கொண்டு வரும் மகா சூழ்ச்சியாகும்.
நுழைவுத் தேர்வை ரத்து செய்ததன் மூலமாக தமிழகத்தில் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர். கிராமப்புற மாணவர்களுக்கும், ஏழை, எளிய மாணவர்களுக்கும் ஏராளமான கல்வி வாய்ப்புகள் கிடைத்தன. மீண்டும் நுழைவுத் தேர்வு ஏற்பாட்டின் மூலம் ஒருவகை பன்முக கலாசாரம், மொழி, கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றம் ஆகியவைகளுக்கு ஆப்பு அடிக்கப்படுகிறது.
இதனை முழு மூச்சாக எதிர்த்து தடுத்து நிறுத்த வேண்டியது கட்சி வேறுபாடுகளைத் தாண்டிய முக்கிய கடமை ஆகும். தமிழக முதல்வரும் இந்த நுழைவுத் தேர்வு ஏற்பாட்டை எதிர்த்துள்ளார். எனினும் இப்போதும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.
இதை கண்டித்து வருகிற 12ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் மாணவர்கள், இளைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.