பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்ற இந்தியாவின் சாய்னா நேவால் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
தாய்லாந்தில் நடைபெற்று வரும் தாய்லாந்து கிராண்ட பிரிக்ஸ் கோல்ட் பாட்மின்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் நேற்று தாய்லாந்தின் ஷாப்சிரி தயிரடன்சயியை 21-10, 22-20 செட்களில் இந்தியாவின் சாய்னா நேவால் வீழ்த்தினார். இதன்மூலம் இன்றைய அரையிறுதிப் போட்டிக்கு சாய்னா நேவால் தகுதிப் பெற்றார்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா சாய்னா நேவால், தாய்லாந்தின் பிரான்டிப் புரனாபிராசர்சூக்கை எதிர்கொண்டார்.
உலக பாட்மின்டன் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள சாய்னா நேவால் இன்றைய போட்டியில் துவக்கம் முதலே சிறப்பாக ஆடினார். சாய்னா நேவாலின் அதிரடி ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் தவித்த உலக பாட்மின்டன் தரவரிசையில் 17வது இடத்தில் உள்ள பிரான்டிப் தடுமாறினார்.
42 நிமிடங்கள் தொடர்ந்த இப்போட்டியின் இறுதியில் இந்தியாவின் சாய்னா நேவால் 24-22, 21-11 என்ற நேர் செட்களில் வெற்றிப் பெற்றார். இதன் மூலம் இந்தியாவின் சாய்னா நேவால் தாய்லாந்து கிராண்ட பிரிக்ஸ் கோல்ட் பாட்மின்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.