காற்றாலை மின்உற்பத்தி திடீர் சரிவு: மின்தடை நேரம் அதிகரிக்குமா?
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 7,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவுக்கு காற்றாலைகள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இப்பகுதிகளில் மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் இந்த காலகட்டத்தில் மட்டும் தினந்தோறும் சராசரியாக 3,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
காற்றாலைக்கு ஏற்றவாறு அளவு கூடுவதும், குறைவதும் உண்டு. இந்த ஆண்டு முன்கூட்டியே காற்றாலை மின் உற்பத்தி தொடங்கியது. மேலும் எப்போதும் இல்லாத அளவுக்கு 3,800 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கிடைத்தது. இதன் அடிப்படையில் தான் மின்தடை நேரத்தை மின் வாரியம் 50 சதவீதம் குறைத்தது.
ஆனால் அனல் மின் உற்பத்தி போல காற்றாலை மி்ன் உற்பத்தி நிரந்தரமானது அல்ல. சராசரியாக 3,400 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மேட்டூர், வடசென்னை, வல்லூர் ஆகிய அனல் மின் நிலையங்களும், 1000 மெகா வாட் மின்உற்பத்தி திறன் கொண்ட கூடங்குளம் அணு மின் நிலையமும் முழு மின் உற்பத்தியை தொடங்கும் போது தான் மின் தடை பெரிய அளவில் குறையும் என கூறப்படுகிறது.