பரிதாபமாக முடிந்து போன மஹியின் 86 மணி நேர உயிர்ப் போராட்டம்
ஹரியானா மாநிலம் குர்கான் அருகே உள்ள மானேசர் பகுதியில் இருக்கும் கோ என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மஹி கடந்த புதன்கிழமை இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி விளையாடியபோது எதிராபாராவிதமாக 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டாள். குறுகிய அந்த குழிக்குள் விழுந்த சிறுமி சுமார் 15 நிமிடமாக அலறியுள்ளாள்.
அதன் பிறகே அவளின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடி வந்தனர். ஆனால் மீட்பு படையினர் இரவு 12.30 மணிக்கு தான் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். சிறுமி கிட்டத்தட்ட 2 மணிநேரமாக தன்னைக் காப்பாற்றுமாறு அழுதாள். அதன் பிறகு அழைத்தாலும் பதில் சொல்ல மறுக்கிறாள் என்று சிறுமியின் தந்தை தெரிவித்தார்.
மீட்பு படையினர் ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக மற்றொரு பெரிய சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்க இரவு பகலாக போராடினர். சிறுமி சுவாசிக்க குழிக்குள் ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வந்தது. மேலும் சிறுமியைக் கண்காணிக்க குழிக்குள் கேமரா அனுப்பப்பட்டது. ஆனால் அதில் சிறுமியின் செயல்கள் தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கிடையே சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறு தோன்றிய அப்பகுதியைச் சேர்ந்த ரோடாஷ் தாயல் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறு தோன்றியது தொடர்பாக விசாரணை நடத்துமாறு குர்கான் மாவட்ட நீதிபதி பி.சி. மீனா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அன்று சோர்ந்து காணப்பட சிறுமி, வெள்ளிக்கிழமை மேலும் பலகீனமானாள். இதனால் சிறுமி உயிருடன் மீட்கப்படுவாளா என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும் மீட்பு படையினர் மண் சரிவு ஏதும் ஏற்படாமல் இருக்க மிகவும் எச்சரிக்கையுடன் சிறுமி அருகே செல்ல முயன்றனர்.
நேற்று முழுவதும் சிறுமிக்கு அருகே செல்ல முயற்சித்தனர். அவர்கள் முயற்சிக்கு இன்று தான் பலன் கிடைத்தது. ஆனால் அந்த சந்தோஷம் நீண்டநேரம் நீடிக்காமல் முடிந்து போனது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.