பிரதமர் வருகை எதிரொலி: கடலோரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு
தூத்துக்குடி: தமிழகம் மற்றும் புதுவைக்கு பிரதமர் வருவதை முன்னிட்டு கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புதுவைக்கு பிரதமர் மன்மோகன்சிங் அடுத்த வாரம் வருகிறார். இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீசார், மத்திய, மாநில உளவுத்துறையினர், கியூ பிரிவு போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி கடலோரப் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மரைன் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள 8 கடற்கரை செக்போஸ்ட்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் கடலுக்குள் 12 கிமீ தொலைவு வரையிலும், மன்னார் விரிகுடாவில் உள்ள முக்கிய தீவுகளைச் சுற்றிலும் மரைன் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், எஸ்.ஐ.க்கள் நீலகண்டன், பொன்ராஜ் ஆகியோர் படகுகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகள் படகுகளில் இலங்கைக்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவும் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணி நடத்தப்பட்டு வருகிறது.