விழுப்பும் அருகே போலி சாமியாரைப் பிடித்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த மக்கள்
விழுப்புரம்: விழுப்புரத்தில் பக்தர்களை ஏமாற்றி பணம் பறித்த போலி சாமியாரை பாதிக்கப்பட்ட நபர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது திருப்பாலப்பந்தல். அங்கு பழமையான மத்தியநாதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சிதிலமடைந்து, பூஜைகள் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 10 மாதத்திற்கு முன்பு காவி உடை அணிந்த சாமியார் ஒருவர் வந்து இந்த கோவிலை புதுப்பித்து, பல்வேறு பரிகார பூஜைகள் நடத்தப் போவதாக கூறி கோவிலில் தினசரி பூஜைகள் செய்து வந்தார். இதில் பொதுமக்களும், அரசியல் பிரமுகர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
கோவிலுக்கு வரும் பகத்தர்கள் கூட்டம் திடீரென குறைந்து போனதால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாமியார் காணாமல் போனார். இந்த நிலையில் அரக்கோணத்தை அடுத்த அணைக்கட்டாபுத்தூர் கிராமத்தில் உள்ள ஏகாம்பரர் உடனமர் காமாட்சியம்மன் கோவிலை திருப்பணி செய்வதாகவும், அங்கு நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் வருவதாகவும் கூறி அழைப்பிதழ் அச்சடித்து, மக்களை நம்ப வைத்து பணம் பறித்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த திருப்பாலப்பந்தல் கிராம மக்கள் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் அணைக்கட்டாபுத்தூர் கிராமத்திற்குச் சென்று சாமியாரிடம் நைசாகப் பேசி அவரை அழைத்து வந்து நேற்று மாலை திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த சாமியார் பொள்ளாச்சி அருகே சோமந்துரைசித்தூரைச் சேர்ந்த மலையன் மகன் செல்வராசு (45) என்றும், அவருக்கு சுதா என்ற மனைவியும், 20 வயதில் ஒரு மகனும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்றும், அவரை குடும்பத்தினர் ஒதுக்கி வைத்ததால் சாமியாராக மாறியதும் தெரிய வந்தது.
மேலும் அவர் பொது மக்கள் பலரிடம் மோசடியான வார்த்தைகள் கூறி பணம் பறித்த சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.