இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சங்மாவுக்கு ஏகப்பட்ட ஓட்டு கிடைக்கும்...!
ஜூலை 19ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ்காரரான பிரணாப் முகர்ஜி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட்பாளராக நிற்கிறார். அவரை எதிர்த்து பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார். சங்மாவுக்கு அதிமுக, பாஜக, பிஜூ ஜனதாதளம், சிரோண்மணி அகாலிதளம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
பிரணாப் முகர்ஜிக்கே தற்போதைக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்புகள் உள்ளன. அவருக்கு கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. ஆறரை லட்சம் வாக்குகளுக்கு மேல் அவருக்கு சேகரமாகியுள்ளது. அதேசமயம், சங்மாவுக்கு மூன்றே கால் லட்சம் அளவுக்குத்தான் வாக்குகள் கிடைக்கும் நிலை உள்ளது.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் சங்மாவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்கப் போகிறது. தமிழகத்தில் மொத்தம் 234 எம்.எல்.ஏக்களும், லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பிக்கள் 57 பேரும் உள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு எம்.எல்.ஏவின் வாக்கு மதிப்பானது 176 ஆகும். எம்.பியின் வாக்கு மதிப்பு 708 ஆகும்.
அதிகபட்சமாக அதிமுக கூட்டணிக்கு 155 எம்.எல்.ஏக்களும், 14 எம்.பி்க்களும் உள்ளனர். இவர்களுடைய மொத்த ஓட்டு மதிப்பானது 37,192 ஆகும்.
அதேசமயம், திமுக கூட்டணிக்கு 41 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் எம்.பிக்கள் எண்ணிக்கை 40 ஆக உள்ளது. இதனால் அவர்களுடைய ஓட்டுக்கள் 35,536 ஆகும்.
தேர்தலைப் புறக்கணிப்பதாக கூறியுள்ள தேமுதிகவுக்கு 5104 ஓட்டுக்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2116 ஓட்டுக்களும் உள்ளன. இவர்களுக்கு மொத்தமாக 37 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். சிபிஐக்கு ஒரே ஒரு எம்.பி உள்ளார்.
மொத்தத்தில் நாட்டிலேயே அதிக அளவாக தமிழகத்தில் சங்மா அதிக வாக்குகளைப் பெறுகிறார், பிரணாப் குறைந்த வாக்குகளைப் பெறுகிறார்.