பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க கிராமம் கிராமமாக மக்களை திரட்டுவேன்: வைகோ
கரூர்: பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதை தடுக்க கிராமம் கிராமமாகச் சென்று மக்களை திரட்டுவேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மதிமுக சார்பில் செப்டம்பர் 15ம் தேதி அண்ணாதுரை பிறந்த நாள் விழா மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் கரூரில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது,
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு இடுக்கி திட்டம் என்ற பெயரில் ஏழு தடுப்பணைகள் கட்ட முயற்சி செய்து வருகிறது. முல்லைப் பெரியாறில் துவங்கி அடுத்தடுத்து தமிழகத்துக்கு கேரளா பல இன்னல்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது. ஜூன் 24ம் தேதி முதல் அமராவதி ஆற்றிலிருந்து ஊர் ஊராகச் சென்று மக்களை சந்தித்து, அணை கட்டினால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக் கூறி மக்களை திரட்ட உள்ளேன்.
அணை கட்டினால் கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் வாழ்வாதாரம் மற்றும் விவசாயம் முற்றிலும் பாதிக்கும். பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க கிராமம் கிராமமாகச் சென்று மக்களை திரட்டுவேன். கேரளா, கர்நாடகா அரசுகள் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிப்பதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. மத்தியில் உள்ள கேரள அரசு அதிகாரிகள் தயாரித்து கொடுத்த அணை பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வந்தால் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களை கைப்பற்றும் நிலை ஏற்படும் என்று பிரதமர் மன்மோகனிடம் ஏற்கனவே எச்சரித்துள்ளேன் என்றார்.