லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். போட்டிகளில் பங்கேற்க உள்ளவர்கள் தங்கி பயிற்சி மேற்கொள்ளும் வகையில், ஒலிம்பிக் கிராம உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தின் மைய பகுதியில் 'ஒன் பிளேனட் சென்டர்' என்ற அனைத்து வசதிகளுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை நேற்று லண்டன் மாநகர மேயர் போரிஸ் ஜான்சன் திறந்து வைத்தார்.
இங்கு மொத்தம் 2,818 அடிக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும் இரண்டு தனி பெட்டுகள், டேபிள்கள், டிவி, வயர்லெஸ், இண்டர்நெட் என்று அனைத்து வசதிகளும் உள்ளது. விளையாட்டு வீரர்களின் வசதிக்காக சொகுசு அறைகளில் 22 ஆயிரம் தலையணைகள், 9 ஆயிரம் அலமாரிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வீரர்கள், வீராங்கனைகள் ரிலாக்ஸ் செய்து கொள்ள கலை நிகழ்ச்சிகள், சமுதாய நிகழ்ச்சிகள், போட்டிகள் ஆகியவை நடத்தப்பட உள்ளது. 5,500 பேர் அமர்ந்து சாப்பிட கூடிய பிரமாண்ட டைனிங் ஹால் உள்ளது. இந்த வார இறுதியில் இருந்து வீரர்கள் விளையாட்டு கிராமத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இது குறித்து இங்கிலாந்து சுற்றுபுற செயலாளர் கரோலின் ஸ்பில்மேன் கூறியதாவது,
'ஒன் பிளேனட் சென்டர்' பூங்காவில் வசிக்கும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விரும்பும் முழு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பும் போது, சுமுகமான மற்றும் இயற்கை சார்ந்த சிந்தனையுடன் செல்ல வேண்டும். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு அந்த அனுபவம் என்றும் மனதில் இருக்க வேண்டும் என்றார்.