லண்டன் ஒலிம்பிக் போட்டி முடிவடைந்த நிலையில், தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 10 பேர் கலந்து கொள்கின்றனர்.
இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவு போட்டியில் இந்திய வீரர் சரத் கயக்வாடு கலந்து கொண்டார். முதல் பிரிவில் கலந்து கொண்ட சரத், போட்டியின் தூரத்தை 1.07.12 நேரத்தில் கடந்து 4வது இடத்தை பிடித்தார்.
மேலும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களில் அவர் 9வது இடத்தை பிடித்தார். இறுதிப்போட்டிக்கான தகுதிப் பெறும் நேரத்தில் இருந்து 0.58 நொடிகள் பின்னடைவை சந்தித்த சரத், போட்டியில் இருந்து வெளியேறினார். ஆனால் தனிப்பட்ட முறையில் மிக குறைந்த நேரத்தில் பந்தயத்தூரத்தை சரத் கடந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
பாராலிம்பிக்ஸில் நான் கலந்து கொண்டு சிறப்பாக நீந்தியதை எண்ணி பெருமைப்படுகிறேன். இறுதிப்போட்டியில் பங்கேற்க 5 வினாடிகள் வித்தியாசத்தில் வாய்ப்பை இழந்தது வருத்தம் அளிக்கிறது என்றார்.
இந்திய நீச்சல் வீரர் சரத், பாராலிம்பிக்ஸில் மொத்தம் 4 வகையான நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்கிறார். இதில் 100 மீட்டர் பட்டர்பிளை போட்டியில் வாய்ப்பை இழந்த நிலையில், இன்னும் 100 மீட்டர் பிரேக்ஸ்ட்ரோக், 50 மீட்டர் ப்ரீஸ்டைல் மற்றும் 200 மீட்டர் ஐஎம் ஆகிய போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.
நாளை நடைபெற உள்ள ஆண்களுக்கான 100 மீட்டர் பிரேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் சரத் கலந்து கொள்ள உள்ளார்.