லண்டன்: லண்டன் பாராலிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கி சுடுதல், பளுத்தூக்குதல் போட்டிகளில் இந்திய வீரர்கள் தோல்வியை தழுவினர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டி முடிவடைந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 10 பேர் கலந்து கொள்கின்றனர்.
இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் நரேஷ் சர்மா கலந்து கொண்டார். இப்போட்டியில் மொத்தம் 29 வீரர்கள் கலந்து கொண்டார். 571 புள்ளிகளை பெற்ற நரேஷ் சர்மா 24வது இடத்தை பிடித்தார். இதனால் தகுதிச்சுற்றுடன் நரேஷ் சர்மா வெளியேறினார்.
சீனா வீரர் சவோ டாங் 596 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்று தங்கம் வென்றார். சுவீடனின் ஜகோப்சன் வெள்ளிப்பதக்கமும், ஜெர்மனியின் நியூமெயிர் வெண்கலப்பதக்கமும் வென்றார்.
நரேஷ் சர்மா இன்னும் 2 வகையான துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார். அடுத்தபடியாக வரும் 4ம் தேதி கலப்பு 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் போட்டியில் நரேஷ் சர்மா கலந்து கொள்ள உள்ளார்.
பளுத்தூக்குதலில் ஏமாற்றம்:
பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவின் பளுத்தூக்குதல் போட்டியில் இந்தியாவின் பர்மன் பாட்ஷா கலந்து கொண்டார். இதில் மொத்தம் 150 கிலோ பளுவை தூக்கிய பாட்ஷா, போட்டியில் 5வது இடத்தை பிடித்தார். நைஜீரியாவை சேர்ந்த யாகுபு அடிசோகன் 180 கிலோ பளுவை தூக்கி உலக சாதனை படைத்து, தங்கப்பதக்கம் வென்றார்.