இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 10 பேர் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் கிரிஷா ஹோசநகரா நாகராஜிகவுடா கலந்து கொண்டார். இதில் கிரிஷா 1.74 மீட்டர் உயரத்தை தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். இதை உயரத்தை குறைந்த வாய்ப்புகளில் தாண்டிய பிஜி நாட்டு வீரர் லிசா டிலானா தங்கப்பதக்கம் வென்றார். போலாந்தை சேர்ந்த லூகாஸ் வெண்கலப்பதக்கம் வென்றார்.
24 வயதாகும் கிரிஷா, பெங்களூரை சேர்ந்தவர். கடந்த 2008ம் ஆண்டு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, இடது காலில் செயற்கை உறுப்பு பொருத்தி உள்ளார். பெங்களூரில் செயல்பட்டு வரும் சமர்த்தனம் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கிரிஷா, உயரம் தாண்டுதல் பயிற்சியில் ஈடுபட்டார். தற்போது ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.