லண்டனில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த மொத்தம் 10 பேர் கலந்து கொள்கின்றனர். இவர்களில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்ட கிரிஷா நாகராஜ கவுடா, வெள்ளிப்பதக்கம் வென்றார். தனது ஒலிம்பிக் பதக்கத்தை கருத்தில் கொண்டு தனக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
இது குறித்து கிரிஷா கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டியில் நான் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவில் உள்ள திறமையுள்ள மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் விளையாட்டு திறமையை வெளி உலகிற்கு காட்ட ஊக்கமாக அமையும் என்று நம்புகிறேன்.
அதிக மக்கள் தொகையை கொண்ட உங்கள் நாட்டில் இருந்து 10 பேர் மட்டுமே பாராலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொள்ள வந்துள்ளீர்களே என்று லண்டனில் கேட்கின்றனர். இது உண்மையில் வெட்கப்பட வேண்டிய காரியம் தான். வரும் 2016ம் ஆண்டு ரியோ பாராலிம்பி்க்ஸ் போட்டியில் இந்தியாவில் இருந்து அதிக வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
எனக்கு வருமானத்திற்கு எந்த வழியும் இல்லை. இதுவரை எனது குடும்பத்தினரும், பெங்களூரில் உள்ள தேசிய விளையாட்டு ஆணையமும், பயிற்சியாளரும் தான் எனக்கு உதவி வருகின்றனர். பாராலிம்பிக்ஸிற்கு நான் தேர்வு செய்யப்பட்ட பிறகு, எனக்கு கர்நாடகா அரசு தரப்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
தேசிய விளையாட்டு ஆணையத்தில் எனக்கு வேலை தருவதாக, விளையாட்டு அமைச்சர் அஜய் மேக்கன் தெரிவித்துள்ளார். நான் நாடு திரும்பிய உடன் அவரை சந்தித்து இது குறித்து பேச உள்ளேன்.
பெய்ஜிங், லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஒரு சாம்பியன். அவர் தான் எனது 'ரோல் மாடல்'. லண்டனில் மூவர்ணக்கொடியை இவர் ஏந்தி சென்ற போது, நானும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. தற்போது தங்கப்பதக்கம் பெறும் வாய்ப்பை தவற விட்டுவிட்டேன். அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்.
சிறு வயது முதல் சச்சினின் ஆட்டத்தை பார்த்தே வளர்ந்தவர் நான். கிரிக்கெட் ரசிகர்கள் கடவுளாக அவரை நினைக்கின்றனர். அப்படி நினைப்பவர்களில், நானும் ஒருவன் என்றார்.
கிரிஷாவின் கோரிக்கையை ஏற்றுள்ள விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேக்கன், தேசிய விளையாட்டு ஆணையத்தில் கிரிஷாவிற்கு பயிற்சியாளர் பணி அளிக்கப்படும் என்று தெரிவி்த்துள்ளார்.