நிலக்கரி முறைகேடு: தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் திமுக அமைச்சர் ஜெகத்ரட்சகன்
தற்போதைய திமுக மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய நிறுவனமான ஜேஆர் பவர் நிறுவனத்திற்கு கடந்த 2007ம் ஆண்டு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கிடைக்க உதவினார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஜெகத்ரட்சகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2006ம் ஆண்டு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்வது குறித்து ஒரு பொது விளம்பரம் வெளியிட்டிருந்தது. அதன் அடிப்படையில் குஜராத் மாநில அரசுக்கும், புதுவை மாநில அரசுக்கும் சேர்த்து ஒரே இடமாக ஒடிசா மாநிலம் நைமி என்ற இடத்தில் மத்திய அரசு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்தது. இந்த நிலையில் புதுவை மாநில அரசு அதன் தொழில் முனையமான பிப்டிக் மூலம் ஜே.ஆர்.பவர் ஜென் பிரைவேட் லிமிடெட் கம்பெனியுடன் 17.01.2007-ல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டது.
மேற்கண்ட ஒப்பந்தம் போடப்பட்ட 2007ம் ஆண்டில் நான் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ இல்லை. 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்தவுடன் மேற்சொன்ன ஜே.ஆர்.பவர் ஜென் நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து விலகிவிட்டேன்.
இப்போது, நான் அறிந்தவரையில் மேற்சொன்ன நிலக்கரி வழங்கல் ஒப்பந்தத்தின் மீது எந்த வித செயல்பாடும் நடைபெறவில்லை என்றும், ஜே.ஆர்.பவர் ஜென் கம்பெனியின் பங்குகள் யாருக்கும் விற்கப்படவில்லை என்றும் அறிகிறேன். மேலும், ஜே.ஆர்.பவர் ஜென் கம்பெனியின் இயக்குனர்களிடையே ஏற்பட்ட பிணக்கு காரணமாக சென்னை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் தெரிய வருகிறது.
மேற்சொன்ன நிகழ்வுகள் அத்தனையும் நான் அமைச்சராவதற்கு முன்னால் ஏற்பட்ட நிகழ்வுகள். எனவே, நான் எந்த விதத்திலும் நான் வகிக்கும் அமைச்சர் பதவியை இக்காரியங்களுக்காக பயன்படுத்தவில்லை என உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.