'சீல்' பீதியில் அளவுக்கு அதிகமான ஊழியர்களை வைத்து அதி வேகமாக பட்டாசு தயாரித்த ஓம் சக்தி நிறுவனம்!
விருதுநகர்: எப்போது வேண்டுமானாலும் தனது தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைப்பார்கள் என்ற பயத்தில் அளவுக்கு அதிகமாக, பல மடங்கு திறமையற்ற, அனுபவமற்ற தொழிலாளர்களை வைத்து அதி வேகமாக பட்டாசுகளைத் தயாரித்து வந்துள்ளனர் பெரும் பயங்கரத்தை சந்தித்த சிவகாசி ஓம் சக்தி பட்டாசுத் தொழிற்சாலையை லீசுக்கு எடுத்தவர்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
சிவகாசி முதலிப்பட்டியில் பெரு்ம் வெடிவிபத்தை ஏற்படுத்தி விட்ட ஓம் சக்தி பயர்ஒர்க்ஸ் நிறுவனத்தின் முறைகேடுகளைப் பார்த்தால் மலைப்பும், மகா கோபமும்தான் வருகிறது. அந்த அளவுக்கு மனித உயிர்களைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் முரட்டுத்தனமான வணிக நோக்குடன் மிகக் கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர் அந்த ஆலையை லீசுக்கு எடுத்து நடத்தி வந்த சகோதரர்களான பால்பாண்டியும், மகேந்திரனும்.
இந்தத் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் மற்றும் அதன் உரி்மையாளர் முருகேசன் என்கிற முருகன் ஆவார். இவர் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஆவார். இவரிடமிருந்து லீசுக்கு நடத்தி வந்தவர்கள்தான் இந்த பால்பாண்டியும், மகேந்திரனும்.
இவர்களது தொழிற்சாலைக்கு சமீபத்தில்தான் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கழக அதிகாரிகள் குழு வந்து ஆய்வு நடத்தி கடும் எச்சரிக்கை விடுத்துச் சென்றது. மேலும் உரிமத்தையும் ரத்து செய்தது. ஆனால் என்ன காரணத்தாலோ சீல் வைக்கவில்லை.
இதுதான் பால்பாண்டிக்கும், மகேந்திரனுக்கும் சாதகமாகி விட்டது. இருப்பினும் எப்போது வேண்டுமானாலும் சீல் வைக்கப்படும் அபாயம் இருப்பதை உணர்ந்த இருவரும் அங்கு அதிக அளவில் ஆட்களைப் போட்டு படு வேகமாக பட்டாசுகளைத் தயாரித்து வந்துள்ளனர். அந்தத் தொழிற்சாலையில் அதிகபட்சம் 120 பேரை மட்டுமே வேலைக்கு அமர்த்த முடியும். ஆனால் இந்த அண்ணன், தம்பி இருவரும், 340 பேரை வேலைக்கு வைத்துள்ளனர். இருக்கிற இடத்தில் எல்லாம் ஆட்களை உட்கார வைத்து மிகக் கொடூரமாக வேலை பார்க்க வைத்துள்ளனர்.
பயங்கர வெடி மருந்துகளையும் பாதுகாப்பு இல்லாத கலன்களில் ஸ்டாக் வைத்துள்ளனர். இந்த வெடிபொருட்களு மத்தியில் அமர்ந்துதான் தொழிலாளர்கள் வேலைபார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பலரை மரத்தடியிலும் உட்கார வைத்து வேலை வாங்கியுள்ளனர்.
இங்கு வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு சுத்தமாக எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று போலீஸார் கூறுகிறார்கள்.
காலை 10 மணிக்கு மேல வெயில் ஏறி விடும். அப்போது தயாரித்த பட்டாசுகளைக் காய வைப்பது படு அபாயகரமானது. ஆனால் அந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல், பட்டப் பகலிலும் கூட வெடிகளை வெளியில் போட்டு வைத்துள்ளனர். இந்தக் காய வைத்த வெடிகள் வெடித்துத்தான் பெருமளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி விட்டது என்பது நினைவிருக்கலாம்.
மொத்தத்தில் மனித உயிர்களைப் பற்றிக் கவலைப்படாமல், காசு, பணம், தங்களது வளம் ஆகியவற்றை மட்டுமே மனதில் கொண்டு மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டுள்ளனர் இந்த மகேந்திரனும், பால்பாண்டியும்.