மூளை புற்றுநோய் பாதித்த சிறுவனுக்கு மு.க.அழகிரி ஏற்பாட்டில் ரூ.10 லட்சம் நிதியுதவி
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை அடுத்த சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் குருநாதன். தையல் தொழிலாளி. இவரது ஒரே மகன் லோகேஸ்(10). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்த லோகேஸூக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு எற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் சிறுவன் லோகேஸ், மூளை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
சிறுவனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க ரூ.10 லட்சம் செலவாகும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த லோகேஸின் பெற்றோர் வருத்தம் அடைந்தனர். இந்த நிலையி்ல் இது குறித்து தகவல் அறிந்த திமுக ஆதரவாளர்கள், சிறுவனின் நிலை குறித்து மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து சிறுவனின் மருத்துவ செலவிற்காக, பிரதமர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் கிடைக்க மு.க.அழகிரி ஏற்பாடு செய்தார். தற்போது மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லோகேஸூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏழ்மையில் மகனின் மருத்துவ செலவிற்கு வழியில்லாமல் தவித்த லோகேஸின் குடும்பத்திற்கு உதவிய மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, கொட்டாம்பட்டி பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்தனர்.