கூடங்குளத்தில் அதிரடிப்படை குவிப்பு: கடலோர கிராமங்களுக்கு பஸ் வசதி நிறுத்தம்
நெல்லை: முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து போராட்டக் குழுவினர் கூடங்குளம் அணு மின் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக பரவிய தகவலை அடுத்து அணு மின் நிலையத்தை சுற்றியும், கடலோர கிராமங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்ப கடந்த மாதம் 10ம் தேதி இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி அளித்தது. எனினும் எரிபொருள் நிரப்ப தடை கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருந்ததால் எரிபொருள் நிரப்பும் பணி தாமதமானது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி அணு மின் நிலையத்தை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்க உள்ளது. இந்நிலையில் எரிபொருள் நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவி்த்து போராட்டக் குழுவினர் அணு மின் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடங்குளம் அணு மின் நிலையம் முன்பு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வைராவிகிணறு, காமநேரி, தாமஸ் மண்டபம் பகுதியில் மணல் மூடைகளை அடுக்கி வைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடன் கோவையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள 3 கம்பெனி மத்திய அதிரடிப்படையினரும் கூடங்குளம் அணு மின் நிலையம் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். வஜ்ரா வாகனங்களும், கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதாரி, கூடுதல் எஸ்பி மகேந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு்ள்ளனர். கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் பதட்டமான சூழல் நிலவுவதால் நெல்லை மாவட்ட கடலோர கிராமங்களுக்கு பஸ் வசதி நிறுத்தப்பட்டுள்ளது.