அனுபவமற்ற வடமாநிலத்தை சேர்ந்தவர்களால் பட்டாசு விபத்து: அதிர்ச்சி தகவல்
சிவகாசி: பட்டாசுத் தொழிலில் சிறிதும் அனுபவமற்ற வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை ஈடுபடுத்தியதாலேயே பட்டாசு விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளன.
அஸ்ஸாம் தொடங்கி, மேற்குவங்கம், ஒரிஸா, பீகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கட்டடத் தொழிலுக்காகவும், ஓட்டல்கள், சிறு தொழிற்சாலைகளில் பணி புரியவும் ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இந்த வடமாநிலத் தொழிலாளர்கள் தற்போது சிவகாசி நகரைச்சுற்றியும் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண்டுக்கணக்கில் பட்டாசுத் தொழிலில் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமே மருந்து கலவைப் பற்றி ஓரளவிற்காவது தெரியும். ஆனால் மொழியே தெரியாத நிலையில் எந்த வித அனுபவமும் இன்றி உள்ள வடமாநிலத்தவர்களால் சரியாக புரிந்து கொள்ள முடியாமல் தவறான முறையில் மருந்து கலவைகளை செய்வதாலேயே வெடி விபத்துகள் ஏற்படுவதாகவும் தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
முதலிபட்டி ஒம்சக்தி தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர் பலியாகியிருக்கிறார். அவரது உடலை பெற்றுச் செல்வதற்குக் கூட யாரும் இல்லாத காரணத்தினால் சிவகாசியிலேயே அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலை நிர்வாகத்தினர் குறைந்த ஊதியத்திற்காகவும், பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இதுபோன்ற ஆபத்தான பணியில் ஈடுபடுத்துகின்றனர் இவர்களை அழைத்து வரும் ஒப்பந்ததாரர்கள் யார் என்பது பற்றியும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநிலத்தவர்களைப் பற்றியும் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.