கர்நாடகா மற்றும் கேரளா மீது 365ஐ மத்திய அரசு பயன்படுத்த வேண்டும்: கி.வீரமணி கோரிக்கை
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கருநாடக மாநிலம் காவிரி நீர்ப் பிரச்சினையிலும், கேரள மாநிலம் முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகத் தொடர்ந்து நடந்து கொண்டு வருவதால், தீர்ப்புகளையும் மதிக்காததால் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி 365ஐ (356 அல்ல) பயன்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.
இலங்கையிலிருந்து தமிழ் நாட்டுக்கு சுற்றுலாவுக்கு வரும் பயணிகளுக்கு உணர்ச்சி வயப்படும் தமிழ் நாட்டு மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எக்காரணத்தை முன்னிட்டும் அது வன்முறையாக மாறக் கூடாது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அறிவு வயப்பட்டு நம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.
நாம் மேற்கொள்ளும் செயல்கள் இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் ஊறு விளைவிக்கக் கூடாது என்பதை முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.
சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில் மேலும் கால தாமதம் செய்யாமல் விரைவாக நிறைவேற்றிட மத்திய அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்தப் பிரச்சினை முக்கியமானதாக தலை தூக்கி நிற்கும்.
பொன் முட்டையிடும் வாத்தான நவரத்னா அங்கீகாரம் பெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவினைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் நெய்வேலி நகரத்தில் செப்டம்பர் 10ம் தேதி காலை 11 மணிக்கு பெரியார் சதுக்கத்தில் ஆர்பாட்டம் நடக்கும். கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில், கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.