குஜராத் அரசுடனான உறவுகளை புதுப்பிக்கிறது இங்கிலாந்து
2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த சிலரும் கொல்லப்பட்டனர். இதையடுத்து, குஜராத் மாநில அரசுடனான உறவை இங்கிலாந்து துண்டித்துக் கொண்டது. அந்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் குஜராத் செல்வதைத் தவிர்த்தனர். நரேந்திர மோடியும் இங்கிலாந்துக்கு போகாமல் இருந்தார்.
இந்நிலையில், லண்டனில் இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், குஜராத் மாநிலத்துக்குச் செல்லுமாறு இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம், அந்த மாநில அரசுடனான உறவு வலுப்படும் என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் இந்த அறிவிப்பு தொடர்பாக ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மோடி, ஒரு நல்ல செயலை செய்யாமலே இருப்பதை விட, தாமதமாகவாவது செய்வது நல்லதுதான். குஜராத்துடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ள முடிவு செய்துள்ள இங்கிலாந்தின் முடிவை வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.