மதுரையில் மத்திய நிர்வாக தீர்ப்பாய கிளை தொடக்கம்!
மதுரை: சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திற்கு மதுரையில் கிளை அமைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே, பாதுகாப்புத் துறை, நிதித்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், ஊழியர்கள் தங்களின் பணியிட மாற்றம், சீனியாரிட்டி, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விதமான வழக்குகளை தொடர்வதற்காக மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இந்த தீர்ப்பாயம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இத்தீர்ப்பாயத்தின் கிளையை மதுரையில் நிறுவ வேண்டும் என்று வழக்கறிஞர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மதுரையில் தீர்ப்பாயத்தின் கிளையை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மதுரை அழகர்கோயில் தெருவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இந்த கிளை செயல்படும். மதுரை கிளையின் கட்டுப்பாட்டில் வரும் மாவட்டங்களை சேர்ந்தவர்களின் வழக்குகள் இந்த தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்.
இந்த தீர்ப்பாயத்தின் தொடக்கமாக வரும் நவம்பர் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.