குடிகார கணவனை மருமகனுடன் கூட்டு சேர்ந்து வெட்டி கொலை செய்த மனைவி!
சென்னை: சென்னையில் தினமும் குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுத்து வந்த கணவனை, வெட்டி கொலை செய்தார் மனைவி. இதற்கு மருமகனுக்கும் உதவி செய்துள்ளார். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னை கே.கே.நகரில் உள்ள ஆற்காடு ரோடு 80 அடி சாலை சந்திப்பில் உள்ள பெட்டிக்கடை அருகே நேற்று காலையில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இது குறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.கே.நகர் போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
இது குறித்து விசாரிக்க உதவி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மதியழகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமணி, பெருமாள், பாலசுப்பிரமணி, திருமலை, சுந்தரமூர்த்தி ஆகியோர் அடங்கிய 5 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் சட்டை பக்கெட்டில் இருந்த செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது கொலை செய்யப்பட்டவர் எல்லப்பன் என்பதும், அவர் கே.கே.நகர் விஜயராகவபுரம் 5வது தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து எல்லப்பனின் குடும்பத்தாரிடம், போலீசார் விசாரித்தனர். இதில் எல்லப்பனின் மனைவி காளியம்மாள்(43), அவரை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இதற்கு அவரது மருமகன் பாரதி பாண்டியனும் உதவியுள்ளார்.
இது குறித்து காளியம்மாள், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
வந்தவாசியை சேர்ந்த நாங்கள் திருமணத்திற்கு பிறகு, கே.கே.நகருக்கு வந்து குடியேறினோம். எங்களுக்கு ராஜகுமாரி, மணிமேகலை, வேல்முருகன் என்ற 3 குழந்தைகள் உள்ளனர். இதில் மகள்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
குடிப்பழக்கம் கொண்ட எல்லப்பன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்து வந்தார். மேலும் இரவில் தூங்கி கொண்டிருக்கும் என் மீது சிறுநீர் கழித்தல் போன்ற கேவலமான செயல்களில் ஈடுபடுவார். இதை தட்டி கேட்டால் தகராறு செய்து அடித்து உதைப்பார்.
இந்த நிலையில் எனது மூத்த மகளுக்கு குழந்தை பிறந்தது. அப்போது மருமகன் பாரதிபாண்டியனும் வீ்ட்டிற்கும் வந்திருந்தார். இதை கண்டுகொள்ளாத எல்லப்பன் வழக்கம் போல என்னிடம் மோசமாக நடந்து கொண்டார். இதை தட்டி கேட்ட என்னை, உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் அவமானம் அடைந்த நான், அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.
நேற்றுமுன்தினம் வீட்டிற்கு வந்து என்னிடம் வழக்கம் போல தகராறு செய்துவிட்டு, ஆற்காடு ரோடு சந்திப்பிற்கு சென்று அங்கு படுத்து தூங்கினார். நள்ளிரவில் அங்கு சென்ற நானும், மருமகன் பாரதி பாண்டியனும் தூங்கி கொண்டிருந்த எல்லப்பனை வெட்டி கொலை செய்தோம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கட்டிட தொழிலாளர் எல்லப்பனை கொலை செய்த அவரது மனைவி காளியம்மாளையும், மருமகன் பாரதி பாண்டியனையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.