தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்
ராமேஸ்வரம்: கச்சதீவு அருகே இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 10ம் தேதி 443 விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 5 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கண்டதும் 2 விசைப்படகுகளை சேதப்படுத்திவிட்டு மீன்பிடி வலைகளை அறுத்து நடுக்கடலில் தூக்கி எறிந்து மீனவர்கள் மீது தாக்கிவிட்டு சென்றனர்.
இதனால் பீதியடைந்த தமிழக மீனவர்கள் பாதியிலேயே மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டு ராமேஸ்வரத்திற்கு திரும்பினர். கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க சென்ற படகுகளுக்கு போதிய மீன் கிடைக்காததால் மீனவர்கள் வருவாய் இழந்த நிலையில், இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்திய சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.