இங்கிலாந்தில் தமிழர்களுக்கு ஆளுங்கட்சி கொடுத்த அரிய அந்தஸ்து!
லண்டன்: இங்கிகலாந்தின் ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, தனது கட்சிக்கான உப கட்சியாக இங்கிலாந்துத் தமிழர்களின் பிரிட்டிஷ் தமிழர்கள் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு அந்தஸ்து கொடுத்து தமிழர்கள் மனதில் பால் வார்த்துள்ளது.
பிரிட்டிஷ் தமிழர்கள் கன்சர்வேட்டிவ் கட்சியில் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் நிறைந்துள்ளனர். இதில் ஆளுங்கட்சி எம்.பிக்கள், அமைச்சர்கள், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்ற இதுதொடர்பான நிகழ்ச்சியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்னர்.
வடக்கு அயர்லாந்துக்கான துணை அமைச்சர் தெரசா வில்லியர்ஸ், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவரும், எம்.பியுமான லீ ஸ்காட், சையத் கமால், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் கிரான்ட் சாப்ஸ், ஜாக்கி டோயல் பிரைஸ், ராபர்ட் ஹாப்லான், ரேச்சல் ஜாய்ஸ், ரோஜர் இவான்ஸ், சார்லஸ் டானக், லியாம் பாக்ஸ் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும் பிரிட்டிஷ் தமிழர்கள் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில், கரண் பால், ராஜா, அர்ச்சுனா சிவந்தன், பாட்ரிக் ரத்னராஜா, விஜய் ஜெயந்தன், தாக்ஷா ரவிகுலன், ருத்திரபதி சேகர், வசி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பல்வேறு இன மக்கள் வாழும் இங்கிலாந்தில் தமிழர் தரப்பிற்கு கிடைத்த முதலாவது உரிமை என்று இதனை சொல்லலாம்.
இவ்வாறான கட்சியை உருவாக்குவதற்கும், அதனூடான தமிழர்கள் தரப்பு விஷயங்களை நாடாளுமன்றம் வரை கொண்டுசென்று அதன் மூலமாக இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை தடுத்து நிறுத்தவும், அரசியல் தீர்விற்கான இங்கிலாந்து அரசின் அழுத்தத்தைக் கொடுக்கும் முயற்சிக்காகவும் நீண்ட காலமாக அயராது உழைத்து வந்த ஹேஸல் வெயின்பர்க் மற்றும் கரண் பால் ஆகியோரின் முயற்சிக்கு கிடைத்த பெரு வெற்றியாகவும் இது கருதப்படுகிறது.
இதில் முக்கியமானது, இதுவரை இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த லியாம் பாக்ஸ், தற்போது தமிழர்களுக்கு ஆதரவாக, நட்பாக மாறியிருப்பதுதான்.