பரமக்குடி செல்லவிருந்த நடிகர் கருணாஸை மதுரையிலேயே மடக்கிய போலீசார்
பரமக்குடி: தேவர் குருபூஜை அன்று 3 பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக இன்று பரமக்குடியில் நடக்கவிருந்த மௌள ஊர்வலத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து கிளம்பிய நடிகர் கருணாஸ் மதுரை விமான நிலைய்ததிலேயே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை அன்று பரமக்குடியில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்தால் பரமக்குடியில் பதட்டம் நிலவுகிறது. மேலும் கடந்த 3 நாட்களாக அங்கு பேருந்துகள் ஓடவில்லை. இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக பரமக்குடியில் இன்று மௌன ஊர்வலம் மற்றும் இறுதி அஞ்சலி செலுத்தும் ஊர்வலம் நடப்பதாக இருந்தது. ஆனால் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் இந்த மௌன அஞ்சலி ஊர்வலத்தில் கலந்து கொள்ள நடிகர் கருணாஸ் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை பரமக்குடி செல்லவிடாமல் மதுரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் மதுரை நீதிமன்ற வளாகத்தில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க சென்றார்.
பரமக்குடியில் கண்டன கூட்டத்திற்கு தடை:
தேவர் குருபூஜை அன்று 3 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று பரமக்குடியில் கண்டன கூட்டம் மற்றும் மௌள ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள பல்வேறு ஊர்களில் இருந்து முக்குலத்தோர் பேரவை உள்ளிட்ட முக்குலத்தோர் அமைப்பினர் இன்று காலை முதலே பரமக்குடிக்கு வந்தனர்.
ஆனால் பரமக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் கண்டன கூட்டம் மற்றும் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். தடை உத்தரவையும் மீறி மௌள ஊர்வலம் செல்வோம் என்று முக்குல அமைப்புகளைச் சேர்ந்த சில முக்கியத் தலைவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் ஊர்வலம் செல்வதற்காக அங்கு கூடியவர்களை போலீசார் கலைந்து போகச் செய்தனர்.