சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
புதுச்சேரி: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு புதுவை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் வழக்கறிஞர்களின் வாதம் நடந்து வருகின்றது.
இந்த நிலையில் சங்கரராமன் மனைவி பத்மா, பிறழ் சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்றும், அப்ரூவர் ரவிசுப்பிரமணியத்தை குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் கூறி மனு ஒன்றை அளித்தார். பின்பு அதனை வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்களின் வாதம் தொடங்கியது.
அப்போது அரசு வழக்கறிஞர் தேவதாஸ், பத்மா தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஜடியிடம் அனுமதி கோரியிருப்பதாகவும், இதனால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. சிபிசிஜடி போலீசார் அனுமதி அளிக்காததால் வழக்கறிஞர்களின் வாதத்தை நீதிபதி முருகன் துவக்கி வைத்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் லட்சுமண ரெட்டியார், ராஜரத்தினம் ஆகியோர் வாதாடினர். வழக்கு விசாரணையின் போது விஜயேந்திரர், ரகு உள்ளிட்ட 18 பேர் ஆஜராகினர். ஆனால் ஜெயேந்திரர் உள்பட 6 பேர் ஆஜராகவில்லை.
மதிய உணவுக்கு பின்னரும் வழக்கு தொடர்ந்து நடந்தது. இதுவரை 16 பேருடைய வழக்கறிஞர்களின் வாதம் முடிந்துள்ளது. இன்னும் 8 பேர் வாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.