அமெரிக்கா நிராகரித்ததை இந்தியா ஏன் வாங்கியது.. ஹெலிகாப்டர் ஊழலில் 'விஸ்வரூப' கேள்விகள்!
முக்கியப் பிரமுகர்களுக்காக இந்தியா ரூ. 3,546 செலவில் வாங்கிய 12 அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் இப்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன. இந்த விவகாரத்தில் இந்தியாவில் ரூ. 450 கோடி வரை லஞ்சம் கைமாறியுள்ளதாகவும், முன்னாள் விமானப் படைத் தளபதி தியாகியின் குடும்பத்தினருக்கும் லஞ்சம் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த ஹெலிகாப்டர்களை 2009ம் ஆண்டு அமெரிக்க கடற்படை வாங்க திட்டமிட்டிருந்தது. ஆனால், இவற்றின் தரத்தோடு ஒப்பிட்டால் இதன் விலை மிக மிக அதிகம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்ட ஒபாமா, இந்த ரகத்தைச் சேர்ந்த 28 ஹெலிதாப்டர்களை வாங்கும் திட்டத்தை நிராகரித்துவிட்டார்.
மேலும் இந்த புதிய ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஹெலிகாப்டர்களை மேம்படுத்தும் பணிக்காக ஒதுக்கிவிட்டார்.
ஆனால், இதைத் தான் இந்திய விமானப் படை, ரூ. 450 லஞ்சம் கைமாறிய நிலையில், வாங்கியுள்ளது.
மொத்தம் 12 ஹெலிகாப்டர்களுக்கு பணம் தரப்பட்டுவிட்ட நிலையில் 3 ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் ஒப்படைத்தும் விட்டது இத்தாலிய நிறுவனம். மற்றவை அடுத்த சில மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட இருந்தன. இந் நிலையில் தான் லஞ்ச விவகாரம் வெடித்துவிட்டது.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் சில முக்கிய கேள்விகள் எழுகின்றன.
1. இந்த ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக கடந்த ஆண்டே செய்திகள் வெளியாகியும் ஏன் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடவில்லை
2. இத்தாலி அரசு இதில் நடவடிக்கைகள் எடுத்த பின்னர் தான் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கண் விழிக்க வேண்டுமா?
3. ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் எந்த ஊழலுக்கும் இடம் இருக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனி கூறிக் கொண்டே இருக்கிறார். அதையும் தாண்டி இந்த ஊழல் நடந்தது எப்படி?