பிப்ரவரி கடைசி தேதியில் ஏன் பட்ஜெட் தாக்கல் செய்றாங்க தெரியுமா?
சுதந்திரத்திற்கு முன் இந்தியாவுக்கான பட்ஜெட் அப்போதைய ஆட்சியாளர்களான ஆங்கிலேயர்களின் வசதி மற்றும் நோக்கத்துக்கு ஏற்ப தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இப்போது காலை நேரத்தில் தாக்கலாகும் பட்ஜெட் ஆங்கிலேயர் காலத்தில் மாலையில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கும் ஒரு காரணம் உண்டு.
அப்போதிருந்தே இந்தியா ஒரு முக்கியமான சந்தை என்பதால், இந்திய பட்ஜெட் அறிவிப்புகள் அப்போதைய பிரிட்டிஷ் பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருந்தது. இதை கருத்தில் கொண்டு, அவர்களது நாட்டில் பங்குச்சந்தை வணிகம் தொடங்கும் நேரத்திற்கு ஏற்ப மாலை வேளையில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
முதல் பட்ஜெட் தாக்கல்
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதல் பட்ஜெட் 1947 ஆம் ஆண்டு, நவம்பர் 26ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. சுதந்தரம் அடைந்து 3 மாதங்களே முடிந்திருந்த நிலையில் அந்த பட்ஜெட்டில் எந்த பெரிய முடிவுகளும் எடுக்கப்படவில்லை.
பட்ஜெட் தாக்கல் செய்தவர் தமிழர்
பிரதமர் நேருவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் என்ற தமிழர் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பாஜக ஆட்சி காலத்தில்
நாடு சுதந்திரம் பெற்ற பின்னும், பழைய பிரிட்டிஷ் நடைமுறைப்படியே மாலை வேளையில் தாக்கல் செய்யப்பட்டு வந்த பட்ஜெட், 2001ம் ஆண்டுதான் மாற்றப்பட்டது. அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ததன் பின், பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரம் மாறியது.
தேதிகள் சில நேரம் மாறலாம்
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளன்று மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது எழுதப்படாத விதியாக தொடர்கிறது. எனினும், தேர்தல் உள்ளிட்ட சில காரணங்களால் இந்த தேதி மாறியதுண்டு. கடந்த ஆண்டு, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கிட்டத்தட்ட 15 நாட்கள் கழித்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பரம ரகசியம்
தொடக்க காலங்களில், பட்ஜெட் உரை குடியரசுத்தலைவர் மாளிகையில்தான் அச்சிடப்பட்டது. பின்னர், இது டெல்லி மின்டோ சாலையில் உள்ள பாதுகாப்பு அச்சகத்துக்கு மாற்றப்பட்டது. அந்நேரத்தில் பட்ஜெட் உரையின் ரகசியங்கள் சில கசிந்ததால், 1980ல் இருந்து இது நிதியமைச்சக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பிரத்யேக அச்சகம் அமைக்கப்பட்டு, அங்கு அச்சிடப்படுகிறது.
எதுவும் கசியக்கூடாது
பட்ஜெட் உரையில் வரிவிதிப்பு குறித்த பல முக்கிய முடிவுகள் இடம் பெறுவது கசிந்தால், அது தனிநபர் சிலருக்கு பெருத்த லாபமாக அமையும் என்பதோடு, அரசுக்கும் கணிசமாக இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், பட்ஜெட் உரை தயாரிப்பு முதல் அச்சிட்டு அவை புத்தகக்கட்டுகளாக மக்களவையை வந்தடையும் வரை அனைத்து நிகழ்வுகளும் கழுகுக்கண் கொண்டு கண்காணிக்கப்படும்.
பலமான கண்காணிப்பு
இந்த பணியில் ஈடுபடும் அனைவரும் கடைசி சில நாட்களுக்கு வெளியுலக தொடர்பு அறுந்து... உணவு... உறக்கம் உட்பட அனைத்தையும் நிதியமைச்சக பாதுகாப்பு அறைகளிலேயே முடித்துக் கொள்ள வேண்டிய அளவு ரகசிய பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இந்நாட்களில் அவர்களது மொபைல் போன்கள் வழியே தகவல் கசியாதபடியும் கண்காணிப்பு பலமாக இருக்கும்.
மொராய்ஜி தேசாய் சாதனை
நாடாளுமன்றத்தில் இதுவரை அதிக எண்ணிக்கையில் பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமை முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயைத்தான் சாரும். நேருவின் அமைச்சரவை முதல், இந்திரா காந்தியின் அமைச்சரவை வரை மொத்தம் 10 முறை அவர் பொது பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதில் 8 முறை முழு ஆண்டுக்கான பட்ஜெட்டும், 2 முறை இடைக்கால பட்ஜெட்டும் அடங்கும்.
மன்மோகன்சிங்கின் தாராளமயமாக்கல்
இந்தியாவில் எத்தனையோ பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டாலும், இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பட்ஜெட் என்பது 1992ல் மன்மோகன் சிங் தாக்கல் செய்த பட்ஜெட்தான். இதில்தான் இந்தியாவின் பொருளாதார கொள்கைகள் தாராள மயமாக்கல் பாதைக்கு மாற்றப்பட்டு, சர்வதேச முதலீட்டுக்கும், வர்த்தகத்துக்கும் கதவுகள் திறந்துவிடப்பட்டன.
ப.சிதம்பரம் நிதி அமைச்சர்
டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட உடன் நிதி அமைச்சராக தேர்வு செய்யப்பட்டவர் ப.சிதம்பரம். 2009ம் ஆண்டு மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது நிதி அமைச்சராக பிரணாப் முகர்ஜி மாறினார்.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கவே உள்துறை அமைச்சராகவே தொடர்ந்தார் சிதம்பரம். நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் 2012ம் ஆண்டு மீண்டும் நிதி அமைச்சர் பதவி ப.சிதம்பரத்தை தேடி வந்தது.
இந்திரா காந்தியின் சாதனை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, அடுத்தடுத்த 3 தலைமுறை வாரிசுகள் பட்ஜெட் தாக்கல் செய்த சம்பவங்களும் நடந்துள்ளது. முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1958லும், அவரது மகள் இந்திரா காந்தி 1970லும், அவரது மகன் ராஜிவ் காந்தி 1987லும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இதில் பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே பெண்மணி என்ற பெருமைக்கு உரியவர் இந்திரா காந்தி மட்டுமே.