போதை ஊசிக்கு அடிமையாகும் இளம்பெண்கள்.. அதுவும் கிராமத்தில்!
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த சில நாட்களாக புதிய பேருந்து நிலையத்தின் எதிர்புறம் உள்ள தெருக்களில் இரவு நேரங்களில் 20 முதல் 25 வயது மதிக்கதக்க சில இளம்பெண்கள் சிரிஞ்ச் மூலம் போதை ஊசி போட்டு கொண்டு தள்ளாடியபடியே செல்வது வாடிக்கையாகி வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 7 மணி அளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க 5 பெண்கள் போதை ஊசி போட்டு விட்டு தள்ளாடியபடியே அந்த வழியாக சென்ற வாலிபர்களிடம் ஆபாசமாக பேசியுள்ளனர். இதை பார்த்த் பொதுமக்கள் ஆலங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் அந்த பெண்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
ஏற்கனவே கலாச்சார சீரழிவில் சிக்கி தவிக்கும் கிராமப்புற பெண்கள் இதுபோன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது ஆலங்குளம் பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.
ஆலங்குளம் வளர்ந்து வரும் வியாபார நகரமாக உள்ளது. கம்ப்யூட்டர், டியூசன் சென்டர்கள் இங்கு அதிகம் இருப்பதால் கிராமப்புரத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் ஆலங்குளம் வந்து பயின்று விட்டு இரவில் வீடு திரும்புகின்றனர்.
தற்போது போதை ஊசி பயன்படுத்தும் பெண்கள் பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள தெருவையே தங்களது தவறான செயல்களுக்கு பயன்படுத்துவது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.