பாலியல் வன்முறையில் இருந்து பெண்களை காப்பாற்றும் நவீன உள்ளாடை: சென்னை பெண் என்ஜினீயர் கண்டுபிடிப்பு
ஆமதாபாத்: பாலியல் வன்முறையில் இருந்து தப்பிக்க உதவும் பெண்களுக்கான நவீன உள்ளாடையை சென்னையை சேர்ந்த பெண் என்ஜினீயர் உருவாக்கியிருக்கிறார்.
அதிநவீன உள்ளாடை
பணியிடங்களில், பொது இடங்களில் மட்டுமல்லாது பஸ், ரெயில் போன்ற வாகனங்களிலும் கூட பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் பெருகி வருகின்றன. பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கான தண்டனையை அதிகரிக்க சட்டம் கொண்டு வந்தபோதும், இத்தகைய குற்றங்கள் நடக்காத நாளே இல்லை.இந்த நிலையில், பெண்கள் பாலியல் வன்முறையில் சிக்காமல் தங்களைக் காத்துக்கொள்கிற வகையில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக்கொண்ட உள்ளாடையை 3 என்ஜினீயர்கள் ஒன்றிணைந்து வடிவமைத்து உள்ளனர்.
ஜி.பி.எஸ் வசதி
இந்த உள்ளாடை ஜி.பி.எஸ். என்னும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம், ஜி.எஸ்.எம். என்றழைக்கப்படும் குளோபல் சிஸ்டம் பார் மொபைல் கம்யூனிகேசன்ஸ், பிரசர் சென்சார் கருவிகளை இணைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
சொசைட்டி ஹார்னசிங் எக்யூப்மென்ட்
இதற்கு ‘சொசைட்டி ஹார்னஸிங் எக்யூப்மென்ட்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இதில் இடம்பெற்றுள்ள பிரசர் சென்சார் கருவி பெண்ணுக்கு பாலியல் வன்முறை நடக்கும் வாய்ப்பு உள்ளபோது, இதுபற்றி அவரது பெற்றோருக்கு, போலீசுக்கு 3 ஆயிரத்து 800 கிலோவாட் அளவிலான அதிர்வலைகளை எஸ்.எம்.எஸ். அலர்ட்டுகளாக அனுப்பி அவர்களை உஷார்படுத்தி விடும் என்று இந்த நவீன உள்ளாடை தயாரிப்பில் பங்கு பெற்ற என்ஜினீயர் மனிஷா மோகன் கூறியுள்ளார். ஒரு முறையல்ல 82 முறை இது அதிர்வலைகளை வெளிப்படுத்துகிற சக்திவாய்ந்ததாக இருக்கும்.
செயல்படுவது எப்படி?
இந்த உள்ளாடையின் செயல்பாடு பற்றி மனிஷா மோகனிடம் கேட்டபோது அவர், ‘‘ஒரு பெண்ணை ஆண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்க முயற்சிக்கிறபோது, இதில் உள்ள பிரசர் சென்சார்கள் இயங்கத்தொடங்கி விடும். அந்த நபரை (குற்றவாளியை) இது கடுமையான அதிர்வலைகளால் தாக்கும். மேலும் அவசர போலீஸ் எண் 100 போன்றவற்றுக்கும், அந்தப் பெண்ணின் பெற்றோருக்கும் உடனடியாக குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி வைக்கும்'' என்றார்.
சென்னையை சேர்ந்தவர்
இந்த மனிஷா மோகன் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். இவர் தனது சக என்ஜினீயர்களான ரிம்பி திரிபாதி, நீலாத்ரி பாசு பால் ஆகியோருடன் சேர்ந்துதான் இந்த உள்ளாடையை உருவாக்கியுள்ளார். இது இந்த மாதம் விற்பனைக்கு சந்தைக்கு வந்துவிடும் என தகவல்கள் கூறுகின்றன.
புதுமை விருது
இந்த புதுமையான தயாரிப்பினை வடிவமைத்ததற்காக ஆமதாபாத் ஐ.ஐ.எம்.மில் நடந்த நிகழ்ச்சியில், இளம் காந்திய இளைய தொழில் நுட்ப விருது வழங்கப்பட்டுள்ளது.
வடிவமைக்க தோன்றியது எப்படி?
இந்த தயாரிப்பு பற்றி மனிஷா மோகன் மேலும் கூறும்போது, ‘‘இதை கூட்டு தயாரிப்பாக தயாரித்து அளிக்க நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால் இது பற்றி முடிவு எதையும் நாங்கள் எடுக்கவில்லை. இந்த தயாரிப்பை மீண்டும் சலவை செய்து பயன்படுத்தும் விதத்தில் சரியான இழையைப் பயன்படுத்த ஆலோசனை வழங்கி எங்களுக்கு உதவுமாறு தேசிய ஆடை வடிவமைப்பு கல்லூரியில் (நிப்ட்) உள்ள எனது நண்பர் ஒருவரை நாடி உள்ளேன்'' என்றார்.இத்தகைய ஒரு உள்ளாடையை வடிவமைக்க வேண்டும் என்று உங்களுக்கு எப்படி தோன்றியது என்ற கேள்விக்கு மனிஷா மோகன் பதில் அளிக்கையில், ‘‘டெல்லி மாணவி ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவமும், பெங்களூரில் ஒரு கால் சென்டர் பெண் ஊழியர் கற்பழிக்கப்பட்ட சம்பவமும்தான் இந்தத் தயாரிப்பை நாங்கள் உருவாக்க தூண்டியது. பெண்கள் தங்களை வன்முறையில் இருந்து காத்துக்கொள்வதற்கு உதவும் வகையில் புதுமையான ஒரு சாதனத்தை வடிவமைக்க வேண்டும் என்று முயற்சி செய்து இப்போது வெற்றி கண்டுள்ளோம்'' என்று கூறினார்.