அரசு வசமாகும் அண்ணாமலைச் செட்டியார் நிறுவிய பல்கலைக்கழகம்!
சென்னை: யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், அண்ணாமலைச் செட்டியார் நிறுவிய சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இப்படி அரசு வசம் போகுமென்று. ஆனால் நிலைமை எல்லை மீறிப் போன காரணத்தால்தான் இன்று வள்ளல் அண்ணாமலை செட்டியார் நிறுவிய பல்கலைக்கழகத்தை சிறப்பு மசோதா மூலம் அரசு கையகப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிர்வாக முறைகேடுகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை இன்று அரசு ஏற்கும் நிலை உருவாகியுள்ளது. இதை மாணவர்களும், ஆசிரியர்களும் வரவேற்றுள்ளனர்.
பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளனர் ஆசிரியர்கள். தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென தனி இடத்தைப் பெற்ற பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம். அத்தகைய பல்கலைக்கழகம் அரசின் கைகளுக்குப் போவது குறித்த ஒரு பார்வை...
கல்லூரிகள்.. பல்கலைக்கழகம்
சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரை உருவாக்கி அங்கு பல்வேறு கல்லூரிகளைத் தொடங்கினார் அண்ணாமலைச் செட்டியார். பின்னர் தனது கல்வி நிறுவனங்களை, அதனுடன் சேர்ந்த சொத்துக்களுடன் உள்ளாட்சி அமைப்பிடம் 1928ம் ஆண்டு அண்ணாமலை செட்டியார் ஒப்படைத்தார்.
உருவானது அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
மேலும் அண்ணாமலை நகருக்குள் தனது பெயரில் பல்கலைக்கழகத்தை நிறுவி உயர் கல்வி போதிக்கவும் விருப்பம் தெரிவித்தார் அண்ணாமலை செட்டியார். கூடவே ரூ. 20 லட்சம் நிதியையும் அரசிடம் அவர் அளித்தார். மேலும் தனது பெயரில் அமையும் பல்கலைக்கழகத்தில் தனது வாரிசுகளுக்கு அதிகாரம், சலுகைகள் பெற உரிமை உண்டு என்றும் அவர் அறிவித்தார்.
இணை வேந்தர் பொறுப்பில் அண்ணாமலை குடும்பத்தினர்
அதன்படி உருவானது அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மேலும், அண்ணாமலைச் செட்டியாரும், அவரது வாரிசுகளும் பல்கலைக்கழத்தில் அதிகாரம், சலுகைகளை அனுபவித்து வந்தனர்.அண்ணாமலை செட்டியாரின் வாரிசுகளுக்கு இணை வேந்தர் பதவி வழங்கப்பட்டு வந்தது.
2012ல் வெடித்த மோதல்
கடந்த 2012ம் ஆண்டுதான் பிரச்சினை வெடித்தது பல்கலைக்கழகத்தில். அந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு ஆகியவற்றை எதிர்த்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் போராட்டங்களில் குதித்தனர். இதனால் வகுப்புகள் பாதிக்கப்பட்டன, மாணவர்கள் பாதிக்கப்பட்டனர், தேர்வுகள் தள்ளிப் போயின.
குடும்ப ஆதிக்கம் முடிகிறது
இதையடுத்தே தற்போது அரசு சிறப்பு சட்டம் மூலம் பல்கலைக்கழகத்தை முழுமையாக கையகப்படுத்துகிறது. இதன் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இனி முழுமையான அரசுப் பல்கலைக்கழகமாக மாறுகிறது. அண்ணாமலைச் செட்டியாரின் குடும்ப வாரிசுகள் இதுவரை அதாவது கடந்த 85 ஆண்டுகளாக அனுபவித்து வந்த இணைவேந்தர் பதவியும் பறி போகிறது.
இனி அமைச்சரே இணைவேந்தர்
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இணை வேந்தராக மாநில அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர்தான் இருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் இனி அமைச்சரே இணை வேந்தராக இருப்பார்.
பதிவாளரும் திடீர் மாற்றம்
இந்த நிலையில் பல்கலைகழக பதிவாளர் மீனாட்சி சுந்தரம் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு 58 ஓய்வு வயது ஆகிவிட்டதால் அவர் பதிவாளர் பதிவியிலிருந்து விடு விக்கப்பட்டுள்ளதாக நிர்வாக அதிகாரி ஷிவதாஸ் மீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் புதிய பதிவாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீனாட்சி சுந்தரம் ஏற்கனவே பொருளாதார துறையில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். அவர் அந்த துறைக்கு மீண்டும் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவமனையும் அரசு வசம் வருமா
அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை ஆகியவற்றையும் அரசு கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
பெரும் பாரம்பரியத்திற்கு மூடு விழா
தமிழக வரலாற்றில் நிச்சயம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு என தனி இடம் உண்டு. அண்ணாமலைச் செட்டியாரின் கனவுகளை கடந்த 85 ஆண்டுகளாக நிறைவேற்றி வந்த இந்த பல்கலைக்கழகம் நிர்வாக சீர்கேடுகள் காரணமாக இன்று தலை குனிந்து நிற்கிறது. மிகப் பெரிய ஒரு பாரம்பரியத்திற்கு மூடு விழா காணப்பட்டுள்ளது.