கூத்தாண்டவர் கோவிலில் குவிந்த திருநங்கைகள்... பாதுகாப்பு வழங்க கோரிக்கை
விழுப்புரம்: கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி கூவாகத்தில் பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் குவிந்துள்ளனர். ஆனால் அங்கு வரும் திருநங்கைகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில். இங்கு ஆண்டு தோறும் சித்திரை பவுர்ணமியை ஒட்டி 18 நாட்கள் திருவிழா நடைபெறும்.
திருநங்கைகள் தங்கள் குலதெய்வமாக கூத்தாண்டவரை வழிபடுகின்றனர். சித்திரை திருவிழா கொண்டாட்டத்தின் போது நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆண்டுதோறும் கூவாகத்தில் கூடுவது வழக்கம்.
விழாவின் முக்கிய அம்சமான தாலிகட்டும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுவதை ஒட்டி பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகம் கிராமத்தில் குவிந்துள்ளனர். மணப்பெண் போல அலங்கரித்துக் கொள்ளும் திருநங்கைகள் கோவில் பூசாரி கையால் இன்று இரவு தாலி கட்டிக்கொள்வார்கள். பின்னர் விடிய விடிய மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடி மகிழ்வார்கள்.
நாளை காலை தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இதன்பின்னர் அரவாண் களப்பலியும், தாலி அறுத்தல் நிகழ்வும் நடைபெறும். ஆற்றில் குளித்துவிட்டு விதவைக் கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து அழுதுவிட்டு பின்னர் ஊர் திரும்புவார்கள்.
பாலியல் தொந்தரவு
கூவாகம் திருவிழாவிற்கு வரும் திருநங்கைகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த திருவிழாவில் பங்கேற்க வெளிநாட்டில் இருந்து கூட திருநங்கைகள் வரும் நிலையில் சென்னையில் வசிக்கும் சில திருநங்கைகள் விழாவிற்கு செல்லாமல் தவிர்த்து வருகின்றனர். காரணம் கூவாகத்தில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான தொந்தரவுதான் என்கின்றனர்.
திருவிழாவிற்கு வரும் கிராமத்து ஆண்கள் பலரும் தங்களை விபச்சாரம் செய்பவர்கள் என்று நினைத்து அணுகுகின்றனர் என்றும், அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தால் அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே திருவிழாவிற்கு வரும் திருநங்கைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும்.