கூவாகம் திருவிழா: ஆனந்தமாக தொடங்கி அழுகையில் முடித்தது
விழுப்புரம்: லட்சக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. செவ்வாய் இரவு பூசாரி கையினால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் புதன்கிழமை காலையில் அரவான் பலியிடப்பட்ட உடன் ஒப்பாரி வைத்து அழுதனர்.
விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் சித்திரை பவுர்ணமியை ஒட்டி ஆண்டுதோறும் 18 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் பங்கேற்க நாடுமுழுவதிலும் இருந்தும் திருநங்கைகள் வருகின்றனர். விழா நடைபெறும் 18 நாட்களும் சுற்று வட்டார கிராமங்களில் எந்த சுப நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.
திருநங்கைகளின் குலதெய்வமாக வணங்கப்படும் கூத்தாண்டவரை வணங்கி பூசாரி கையினால் தாலி கட்டிக்கொள்ளும் திருநங்கைகள் மறுநாள் அரவான் களப்பலியிடப்பட்ட உடன் ஒப்பாரி வைத்து அழுது கட்டிய தாலியை அறுத்துக் கொள்கின்றனர்.
திருநங்கைகளின் திருவிழா
திருநங்கைகள் ஆவலுடன் எதிர்நோக்கிய கூவாகம் திருவிழா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய அம்சமான தாலி கட்டும் நிகழ்வு செவ்வாய் நள்ளிரவு நடைபெற்றது.
பூசாரி கையினால் தாலி
திருநங்கைகள் மணப்பெண் போல அலங்கரித்துக் கொண்டு கோவில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொண்டனர். புது மணப்பெண்கள் விடிய விடிய கும்மியடித்தும், ஆடியும், பாடியும் மகிழ்ந்தனர். இந்தத் திருவிழாவில் பங்கேற்பதும், தாலி கட்டிக்கொள்வதும் தங்களுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சியைத் தருவதாக திருநங்கைகள் தெரிவித்தனர்.
பிரம்மாண்ட தேரோட்டம்
புதன்கிழமை காலை தேரோட்டமும் அதனைத் தொடர்ந்து அரவான் களப்பலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. அரவான் பலியிடப்பட்ட உடன் திருநங்கைகள் ஒப்பாறி வைத்து அழுது, கட்டியிருந்த தாலியை அறுத்தனர்.
எதனால் இந்த பலி
இந்த திருவிழா மகாபாரதக் கதையோடு தொடர்புடையது. அர்ஜூனனுக்கும், வேடுவப் பெண் ஒருத்திக்கும் மகனாக பிறந்தவன் அரவான். சர்வலட்சணம் பொருந்தியவன். குருச்ஷேத்திர போரில் எந்த குற்றமும் இல்லாத சர்வ லட்சணமும் பொருந்திய ஒருவன் தங்கள் பக்கம் பலியானால் வெற்றி நிச்சயம் என்று பாண்டவர்கள் கருதுகின்றனர். இதனால் அரவானை பலி கொடுக்க முன் வருகின்றனர்.
இதற்கு சம்மதிக்கும் அரவான் தான் திருமணம் செய்து கொண்டு ஒருநாள் இல்லற வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்கிறான். உடனே கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணக்கிறார். மறுநாள் பலி கொடுக்கப்பட்ட உடன் விதவைக் கோலம் ஏற்கிறாள் மோகினி. இதுவே ஆண்டுதோறும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
வெள்ளை உடையோடு பயணம்
இந்தியா மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வசிக்கும் அரவாணிகளும் இந்த விழாவில் பங்கேற்றனர். வரும்போது மகிழ்ச்சியோடு வண்ண உடைகளில் வந்த திருநங்கைகள் ஊர் திரும்பும் போது சோகத்துடன் வெள்ளை உடைகளை அணிந்திருந்தனர்.
அடிப்படை வசதி இல்லையே
லட்சக்கணக்கானவர்கள் கூடும் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என திருநங்கையர் குற்றம்சாட்டியுள்ளனர். அதேநேரத்தில், தங்களுக்கு பாலியல் தொந்தரவு அதிகம் இருப்பதாக வேதனை தெரிவித்தனர். வரும் காலங்களிலாவது தேவையான அளவிற்கு அடிப்படை வசதிகளையும், பாதுகாப்புகளையும் அளிக்கவேண்டும் என்று திருநங்கைகள் கேட்டுக்கொண்டனர்.