ஹெலிகாப்டர் பேர ஊழல்: இத்தாலியிடம் இருந்து கிடைத்தது தொலைபேசி உரையாடல்கள்!
டெல்லி: ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பான் தொலைபேசி உரையாடல்களை சிபிஐக்கு இத்தாலி கொடுத்துள்ளது.
விஐபிக்களின் உபயோகத்துக்காக இத்தாலியைச் சேர்ந்த ஃபின்மெக்கனிகா நிறுவனத்தைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்க திட்டமிட்டது. இதில் ரூ. 362 கோடி முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இந்திய விமானப் படையின் முன்னாள் தலைவர் எஸ்.பி.தியாகி உள்ளிட்டோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இந் நிறுவனம் தொடர்பாக இத்தாலியில் நடைபெற்ற மற்றொரு விசாரணையின்போது, அதன் தலைமை செயல் அதிகாரியின் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்தியாவில் பல அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அந்த உரையாடல்களில் இடம்பெற்றிருக்கிறது. பணம் கை மாறியுள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு இந்த உரையாடல்களில் ஆதாரம் இருக்கும் என சிபிஐ கருதியதால் இதைக் கோரியது.
ஏற்கெனவே பணம் கை மாறியுள்ளது தொடர்பாக 40,000 ஆவணங்களை இத்தாலி இந்தியாவிடம் ஏற்கெனவே அளித்திருக்கிறது. இந்நிலையில் மிக முக்கிய ஆதாரமாக கருதப்படும் தொலைபேசி உரையாடல்களின் நகல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.