நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்... பிரதமர் பதவி பற்றி நிதிஷ் கமெண்ட்
2014ம் ஆண்டு ( வெகு விரைவில்!) நடைபெற உள்ள நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதுதான் இப்போதைய கேள்வி. பாஜகவில் மோடி தான் என்று உறுதியாகிவிட்டது. காங்கிரசில் ராகுல் காந்தி முன்னிறுத்தப்படலாம்.
மாநில அளவில் உள்ள ஜெயலலிதா, மாயாவதி, முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் பிரதமர் ரேஸில் உள்ளனர். இது தொடர்பாக கருத்துக்கணிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தான் பிரதமர் வேட்பாளர் அல்ல என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
2014ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட மாட்டேன். பிரதமர் பதவி மிகவும் உயர்ந்த பதவி. எனவே, நான் அந்த பதவிக்கு பொருத்தமானவன் அல்ல.
'கருத்துக்கணிப்புகளில் பிரதமர் பதவிக்கு நான் தகுதியானவன் என தெரிவித்துள்ளனர். எனது பெயரை பிரதமர் பதவி தொடர்பான கருத்துக்கணிப்புக்கு தேர்வு செய்ய வேண்டாம்.
சில தலைவர்கள் தங்களை பிரதமர் பதவிக்கு தகுதியானவன் என நினைத்துக்கொண்டு பிரதமராகலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
பாஜ.க.வைச் சேர்ந்த சத்ருகன் சின்கா தனக்கு பிரதமர் வேட்பாளராகும் தகுதி இருப்பதாக கூறியிருப்பது, அவரது கட்சிக்கு எதிரான செயல்.
பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து கூடுதல் உதவி தேவைப்படுகிறது. ஆனால் பின்தங்கிய மாநிலங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை. எனவே, இந்த முறை பின்தங்கிய மாநிலங்கள் ஒன்றாக இணைந்து 3வது அணி அமைத்து காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத அணியை ஆதரிக்கும்'
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 3வது அணி ஆதரவுடன்தான் ஆட்சி அமைக்க முடியும் என்றார் நிதிஷ்.