விழுப்புரம் அருகே டோல்கேட் கட்டணம் கட்ட மறுத்து பாமகவினர் ரகளை… ஊழியருக்கு அடி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அன்புமணி ராமதாஸ் சென்ற காருக்கு டோல் கேட் கட்ட மறுத்ததோடு ஊழியரை தாக்கி டோல்கேட்டை பாமகவினர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் நேற்று இரவு வழக்கம் போல சுங்க வசூல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, சேலத்தில் இருந்து வந்த பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸின் கார் டோல்கேட்டில் நின்றுகொண்டிருந்த அரசு பேருந்துக்கு பின்னால் வந்து நின்றது.
சுங்க கட்டணம் செலுத்திவிட்டு அரசு போருந்து கிளம்பியதும், அதை பின் தொடந்து அன்புமணி ராமதாஸின் காரும் சென்றது. ஆனால், அன்புமணி கார் கடக்கும் முன்பே தானியங்கி டோல்கேட் மூடிக்கொண்டது. சுங்க கட்டணம் அல்லது வி.ஐ.பி. பாஸ் காட்டினால் தான் கேட் திறக்கும் என ஊழியர்கள் கூறியுள்ளனர். இதை ஏற்க மறுத்த பா.ம.க.வினர் டோல்கேட்டை திறக்க வேண்டும் என்று கூறி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிரச்சனை பெரிதாகவே அன்புமணி ராமதாஸுடன் வந்த பா.ம.க.வினர் சிவகொழுந்து என்ற டோல்கேட் ஊழியரை தாக்கினர். பின்னர் அதை தடுக்க வந்த மேலும் இரண்டு ஊழியர்களையும் தாக்கியுள்ளனர்.
அதோடு டோல்கேட்டில் இருந்த கண்ணாடி, கதவுகள், 3 கம்யூட்டர்களையும் பா.ம.கவினர் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் நேற்று இரவு கட்டண வசூல் நிறுத்தப்பட்டதுடன், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.