மொய்விருந்து: ஏ.டி.எம் ஐ நிரப்பிவைங்கப்பா… புதுக்கோட்டை வாசிகள் கோரிக்கை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது மொய் விருந்து நடைபெறும் காலம் என்பதால் அனைத்து வங்கிகளும் தங்களது ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை நிரப்பி வைத்திருக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், மேற்பனைக்காடு, கொத்தமங்களம், குளமங்களம், மாங்காடு, வடகாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வருடா வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மொய் விருந்து நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெறும். வருடா வருடம் இது தவறாமல் நடத்தப்படுகிறது.
விருந்து நிகழ்ச்சிகள் அதிக அளவில் இந்த சமயத்தில் நடக்கும் என்பதால் அரிசி, பருப்பு உள்ளிட்டமளிகை சாமான்களின் விற்பனை அதிகமாக இருக்கும். மேலும் ஆட்டுக்கறி, கோழிக்கறி போன்றவற்றின் விற்பனையும் அதிகமாக இருக்கும்.
விருந்துக்கு வருவோர், சாப்பிட்டு விட்டு மொய் எழுதிச் செல்வார்கள். தினசரி சராசரியாக ரூ. 1 கோடி வரை இந்தப் பகுதிகளில் மொய்ப் பணம் சேரும் என்கிறார்கள்.
இந்த மொய் விருந்தில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியாது. காரணம், ஒருவர் வைத்த மொய் விருந்துக்கு வந்தவர்கள் வைக்கும் விருந்துகளுக்குக் கட்டாயம் போய் அவர்கள் எழுதியதை விட கூடுதலாக எழுத வேண்டும் என்பதால். இதனால் பலர் இந்த மொய் விருந்துக்காக முன்கூட்டியே சேமித்து வைப்பதும் உண்டு.
ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாகத்தான் மக்கள் மொய் விருந்துக்குத் தேவையான பணத்தை அவ்வப்போது எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பல இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் தீர்ந்து போய் விடுவதால் மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே மொய்க்கால் முடியும் வரை ஏடிஎம் மையங்களில் பணம் தீராத வகையில் இருப்பு வைத்துக் கொள்ளுமாறு வங்கிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.