தூத்துக்குடி - விதிகளை மீறி செயல்படும் மணல் குவாரிகளில் ஆய்வு நடத்த சிறப்பு குழு!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையோர மணல்களை அள்ளி கனிமங்களை பிரித்தெடுக்கும் தனியார் மணல் ஆலைகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக கலெக்டர் ஆஷிஷ்குமாருக்கு மீனவர்கள், பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்தது.
இதனைத்தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின்பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, கோவில்பட்டி கோட்டாட்சியர் கதிரேசன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் வைப்பார் கலைஞானபுரம், வேம்பாரை அடுத்துள்ள பெரியசாமிபுரம் பகுதிகளிலுள்ள விவி தனியார் மணல் ஆலைகளில் கடந்த 6ம் தேதி ஆய்வு மேற்கொண்டனர்.
ஆளும்கட்சிக்கு ஆதரவான வைகுண்டராஜனுக்கு சொந்தமான இந்த மணல் ஆலைகளில் வருவாய்த்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் 6ம் தேதி இரவு திடீரென சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டம் துறையின் துணைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார்.
ஆய்வினைத்தொடர்ந்து கலெக்டர் ஆஷிஷ்குமார் 6ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நிறைய மணல் குவாரிகள் இருக்கிறது. பெரும்பாலும் அவை வி.வி. மினரல் குழுமத்துக்கு சொந்தமானதாக இருக்கிறது. அந்த குழுமத்தை சேர்ந்த சில குவாரிகளில் விதி மீறல்கள் நடந்து வருவதாக புகார் வந்தது. அதாவது அனுமதிக்கப்பட்ட எல்கையைத் தாண்டி அதிகமாக மணல் அள்ளுவதாக மீனவர் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து ரகசிய ஆய்வு நடத்த உத்தரவிட்டிருந்தேன். அந்த ஆய்வில் உண்மை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே அதிரடியாக ரெய்டு நடத்திட உத்தரவிடப்பட்டது.
வருவாய்த்துறை, சுங்கத்துறை, காவல் துறை இணைந்து நடத்திய ரெய்டில் வைப்பாறு கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம், நிலம் அளவை செய்யப்படாத நிலம் மற்றும் குத்தகை வழங்கபட்ட நிலத்திற்கு அருகிலுள்ள நில அளவை செய்யப்படாத 85.611 கனஅடி அளவிலான நிலப்பரப்பிலிருந்து 2,39,712 மெட்ரிக் டன் அளவிலான தாது மணல் முறைகேடாக அள்ளபட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அரசிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நிதியிழப்பு தொடர்பான விபரம் குறித்து கணக்கிடும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த முறைகேடு தொடர்பாக வி.வி.மினரல் குழுமத்தின் மீது 4பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விவி மினரல், பிஎம்சி உள்ளிட்ட கடல்மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு தமிழக வருவாய்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி தலைமையில் வருவாய்த்துறை, சுரங்கத்துறை, சுற்றுச்சூழல்துறை மற்றும் வனத்துறையினர் அடங்கிய சிறப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்குழுவினர் மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து ஒரு மாதத்திற்குள் ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்மண் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பான சர்ச்சைகள் தொடர்வது அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இந்த சர்ச்சை நீண்டுகொண்டே செல்லும் நிலையில் ஆய்வுக்குழுவின் விசாரணை முடியும்வரை மணல் அள்ளுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.